கோயில்களில் செய்ய வேண்டியவை!
இறைவனின் உறைவிடம் தான் ஆலயம். தொடர்ந்து கீழ்கண்ட நியதிகளை எல்லாம் பின்பற்றி
ஆலயங்களுக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டால் எதிர்மறை எண்ணங்கள்
அனைத்தும் படிப்படியாகக் குறையும். வாழ்க்கை வளம் பெறும். அந்த வகையில் எல்லோரும்
கடை பிடிக்க வேண்டிய சில நியதிகள் வருமாறு.
- ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும்.
- ஆலய கோபுரத்தை கண்டதும் கை கூப்பி வணங்க வேண்டும்.
- பிறகு தல விநாயகரை வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.
- கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வழிபட வேண்டும்.
- இதைத் தொடர்ந்து துவார பாலகர்களை வழிபட்டு கருவறை முன்புள்ள விநாயகரை வணங்க வேண்டும்.
- பிறகு கருவறையில் இறைவனை கண்ணார கண்டு, மனதில் இருத்தி வழிபட வேண்டும்.
- அர்ச்சகர் தரும் திருநீறை கீழே சிந்தாமல் நெற்றியில் பூசி உடன் இறைவனின் பெயரை உச்சரித்தபடி கருவறையை 3 தடவை வலம் வந்து வழிபடுதல் வேண்டும். குறிப்பாக (விருப்பம் இருந்தால்) விபூதி, குங்குமம் பெறும் முன்பே அர்ச்சருக்கு தட்சனை கொடுத்து விட வேண்டும். அதுவே நியதி. அதே போல, உங்களுக்கு விருப்பம் இருந்தால் சுவாமி உண்டியலில் காசு போடலாம்.
- முதல் முறை வலம் வரும் போது அம்பாள் சன்னதி, உற்சவர், நடராஜரை வழிபட வேண்டும்.
- இரண்டாம் தடவை வலம் வரும்போது, முருகன், நவக்கிரகம், பைரவர், அறுபத்து மூவரை வழிபட வேண்டும்.
- மூன்றாம் முறை வலம் வரும்போது தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டீகேசுவரரை வழிபட வேண்டும்.
- சண்டீகேசுவரரை வழிபாடு செய்ததும் ஆலய வழிபாடு முழுமை பெறுவதாக அர்த்தம். இதையடுத்து மீண்டும் கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி, சிறிது நேரம் வடக்கு முகமாக அமர்ந்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.
- ஆலயங்களில் முக்கியப் பூஜைகளை நல்ல நேரம், திதி, ஹோரை பார்த்து செய்வது நல்லது.
- கோவில் விளக்குகளில் எண்ணை ஊற்றி எரிய வைத்தல், புதிய விளக்குகளை ஏற்றி வைத்தல், சிறியதாக எரியும் விளக்கு திரிகளை சரி செய்து எரிய தூண்டுவது புண்ணிய காரியமாக கருதப்படுகிறது.
- முடிந்தால் சனிக் கிழமையில் கோயில் தீபங்களுக்கு நல்லெண்ணெய் வாங்கித் தாருங்கள். இதனால் சனி தோஷம் அகலும்.
- சிவன் கோவிலில் முதலில் சிவனை வழிபட்ட பிறகே சக்தியை வழிபட வேண்டும்.
- விஷ்ணு கோவிலுக்குச் சென்றால் முதலில் மகாலட்சுமியை வழிபட்ட பிறகே விஷ்ணுவை வணங்க வேண்டும். விஷ்ணுவை வழிபடும் போது முதலில் பாதத்தை பார்த்து படிப்படியாக முகம் வரை பார்த்து வணங்க வேண்டும். மகாலட்சுமியை வணங்கும் போது முதலில் கண்களை பார்த்து படிப்படியாக பாதம் வரை பார்த்து வழிபாடு செய்தல் வேண்டும். அதுவே ஆகம விதி.
- ஆலயத்தில் இருந்து வீட்டுக்கு புறப்படும் போது சற்று அமர்ந்து செல்ல வேண்டும். ஏனெனில் சிவாலயங்களில் 7 சிரஞ்சீவிகள் தங்கி இருந்து சிவதரிசனம் செய்பவர்களை அவர்கள் வீடு வரை பின்தொடர்ந்து வந்து மரியாதை செய்வதாக சொல்வார்கள்.
எனவே அவர்களை வணங்கி, நீங்கள் இருங்கள். நாங்கள் சென்று வருகிறோம் என்று விடைபெற வேண்டும். இவ்வாறு முறைப்படி ஆலய தரிசனம் செய்தால் முழுப் பயனையும் பெற முடியும்.











