அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில்,
பிரான்மலை, சிவகங்கை, மூன்றடுக்கு சிவன் கோயில்:
ஒருசமயம் வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என போட்டி எழுந்தது. ஆதிசேஷன் மேரு மலையைச் சுற்றிக்கொள்ள வேண்டும், அதை வாயு பகவான் தனது பலத்தால் பெயர்க்க வேண்டும் என்பதே போட்டி.
ஆதிசேஷன், தன் பலத்தால் மலையை இறுகப் பற்றிக்கொண்டார். வாயு பகவான் எவ்வளவோ முயன்றும், மலையை அசைக்க முடியவில்லை. இந்த போட்டியின் போது, மேரு மலையிலிருந்து துண்டுகள் பெயர்ந்து விழுந்தது.
அவ்வாறு விழுந்த குன்றே, இங்கே மலையாக உள்ளது. இம்மலையில் சிவன் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் இருந்து காட்சி தருகிறார். பாதாளத்திலுள்ள கோயிலில் சிவன், கொடுங்குன்றநாதர் என்ற பெயரில் அருளுகிறார்.
இவருக்கான அம்பிகை, குயிலமுதநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். மத்தியிலுள்ள கோயிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மேல் பகுதியில் அம்பிகையுடன் மங்கைபாகராக காட்சி தருகிறார்.
நந்தி இல்லாத சிவன்:
கைலாயம் எனப்படும் மேலடுக்கிலுள்ள கோயில் குடவறையாக அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மங்கைபாகர், அம்பிகையுடன் இணைந்து, அகத்தியருக்கு திருமணக்காட்சி அருளிய கோலத்தில் காட்சி தருகிறார். இதை சிவனின், அந்நியோன்ய கோலம் என்கிறார்கள்.
இந்த சன்னதியின் முன்மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவ,பார்வதி திருமணம் காணச்சென்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. மங்கைபாகர் சிலை, நவ மூலிகைச் சாற்றால் செய்யப்பட்டதாகும்.
எனவே, இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. பவுர்ணமியன்று காலையில் புனுகு, சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர். இவரது சன்னதியில் காசிராஜன் கொடுத்த, உடையவர் லிங்கம் என்ற சிறிய லிங்கம் இருக்கிறது.
மங்கைபாகருக்கு அபிஷேகம் கிடையாது என்பதால், அவருக்குச் செய்ய வேண்டிய அபிஷேகம் அனைத்தும் இந்த லிங்கத்திற்கு செய்கின்றனர்.
குறிஞ்சி நிலத்தில் (குன்றில்) அமைந்த கோயில் என்பதால், இந்நிலத்திற்கு உரிய தேன், தினைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த தோசையை நைவேத்யமாக படைக்கின்றனர். இவரது சன்னதியின் எதிரில் நந்தி கிடையாது. சிவன், அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார்.
எனவே, சிவன் இங்கு நந்திதேவர் இல்லாமல் அம்பிகையுடன் காட்சி தந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இவருக்கு எதிரில் நந்தி இல்லை என்கிறார்கள். மேலும் இவருக்கு கொடிமரம், பலிபீடமும் கிடையாது. கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யும்போது,
சுவாமி சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் என்னும் எட்டு வகையான மூலிகை மருந்துகளை வைப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் சிவன் சிலைக்கு கீழே இவ்வாறு வைக்கப்படுவதில்லை. இவர் முதலும், முடிவும் இல்லாதவராக இருப்பதால், அஷ்டபந்தனம் சாத்தப்படுவதில்லை என்கிறார்கள்.










