கந்தனுக்கு விரதமிருந்து அவனருள் பெறுவோம்.
செவ்வாய்க்கிழமையும், சஷ்டியும் இணைந்த நன்னாள் கந்தனுக்கு விரதமிருந்து அவனருள் பெறுவோம்.
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும். அத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று சஷ்டி விரதம். இந்த சஷ்டி விரதம் செவ்வாய்க்கிழமையில் (மங்கள வாரம்) வருவது மிகவும் சிறப்பு.
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியில் தீராத பிரச்சனைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.
செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி.
சஷ்டி விரதம் :
மாதந்தோறும் வரக்கூடிய சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப்பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும்.
அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி, விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ந்து ஆறு சஷ்டிகள் இந்த விரதத்தைக் கடைபிடிப்பது நல்லது.
மாதந்தோறும் வரும் சஷ்டி விரதத்தைக் கடைபிடிக்க இயலாதவர்கள்கூட, ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்தால், முருகப்பெருமானின் அருளால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம்.
குழந்தை வரம் தரும் விரதங்களில் முதன்மையான விரதமாக கந்த சஷ்டி விரதமே போற்றப்படுகிறது. அதனால்தான், ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று கூறுகிறார்கள். சஷ்டியில் விரதம் இருந்தால், கருப்பையில் குழந்தை வரும் என்பதே இதன் பொருள்.
முருகப்பெருமானுக்கு உரிய செவ்வாய்க்கிழமையும், சஷ்டியும் சேர்ந்து வரும் இந்நாளில் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கினால், அனைத்து நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியாக வாழலாம்.











