கிரகப்பிரவேசம் செய்யும் முறை:.!
வேதங்களில் வீடு கட்டத் தொடங்குவதற்கு கிருகாரம்பம் என்றும் வீடு கட்டி குடிபுகுவதற்கு
கிருஹப்ரவேசம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இக்காலத்தில் இந்த புனிதமான புதுமனை
புகுவிழாவை அதன் விதிமாறி ஆடம்பரப் பொருட்களை வைத்துச் செய்கின்றனர். நாம்
வாழப்போகும் வீடு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற அதை ஒரு
கோவில் போன்றும் இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டும். அது எப்படி செய்வது
முறை என்று அனைவரும் அறிய சித்தர்களின் குரலில் பகிர்கிறேன்.
வீடு கிரகப்பிரவேசம் – சிறந்த மாதம் எது?
சுபகாரியங்கள் என்றாலே அதற்கு நல்ல நேரம், நாள், மாதம் என்று அனைத்தும் பார்ப்பது
இயல்பு.
அதேபோல் நாம் புதிதாக கட்டிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் வைத்து குடிபோவதற்கு, சிறந்த
மாதம், நாட்கள் நட்சத்திரம் மற்றும் லக்னம் எது தெரியுமா?
வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது?
- • சித்திரை
- • வைகாசி
- • ஆவணி
- • ஐப்பசி
- • கார்த்திகை
- • தை
வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த நாட்கள் எது?
- • திங்கட்கிழமை
- • புதன் கிழமை
- • வியாழன் கிழமை
- • வெள்ளிக் கிழமை
வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த நட்சத்திரங்கள் எது?
அசுவினி, ரோகினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வதம்,
சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் வீடு
கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்தவை.
வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த லக்னம் எது?
- • ரிஷபம்
- • மிதுனம்
- • கன்னி
- • விருச்சகம்
- • கும்பம்
எந்த மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யவே கூடாது ஏன்?
ஆனி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த ஆனி மாதத்தில் தான் மகாபலி
சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்தார்.
ஆடி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் இராவணன் தனது
கோட்டையை இழந்தார்.
புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது
அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.
மார்கழி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் துரியோதனன் தன்து
ராஜ்ஜியத்தை இழந்தார்.
மாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் சிவபிரான் ஆல கால
விஷம் அருந்தி மயக்க முற்றார்.
பங்குனி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதம் தான் சிவன் மன்மதனை
எரித்த மாதமாகும்.
ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி போன்ற மாதங்களில் வீடு கட்ட
தொடங்குவது, புது வீட்டிற்கு குடி போகுதல் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பது
மிகவும் நல்லது.
கிரகப்பிரவேசம் செய்யும் முறை :-
பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வரும்படி சொல்ல வேண்டும்.
அழைப்பு நேரிலும் கடிதம் மூலமும் இருக்கலாம்.
தெய்வாம்சம் பொருந்திய இல்லம் அமைத்து குடிபுகும் போது அரசியல் தலைவர்கள்
பிரபலங்கள் பேசுவதை நிகழ்ச்சியினூடே முடிந்த அளவு அந்த நேரத்தில் வைக்காமல் அடுத்த
நேரத்தில் வைத்துக்கொள்ள பார்க்கலாம். கிரஹ வழிபாட்டுக்கு இடையூறு நேராத வண்ணம்
செய்து கொள்ளலாம்.
கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7
நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது.
அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும்
கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாக அள்ளிப்போட்டு விட்டு காலை
விருந்துக்கும் வி.ஐ.பி. வருகைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்வை ஏனோ தானோ என்று
செய்தல் வேண்டாம்.
நாம் வாழப்போகிற இல்லம். பொறுமையாகச் செய்யலாம். ஆடம்பரமான கலாச்சார
உடைகளை தவிர்த்து எளிய உடையை (வேட்டி, துண்டு, புடவைகளை) பூஜை நேரத்தில்
உடுத்திக்கொண்டு அமர வேண்டும்.
வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு
கோபுர வாசலில் சாமிபடம், அரிசி, உப்பு,
பருப்பு, நிறை குடநீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் (5 வகை பழங்கள்) மஞ்சள்,
குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி
மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு (பெண்கள் சொந்த கதை பேசாமல்)
தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வரவேண்டும்.
பெண்கள் மங்களப் பொருட்களோடு வீட்டு வாசலில் நிற்கும் போது பசுவை கன்றுடன் வீட்டைப்
பார்க்கும்படி நிற்க வைத்து அதற்கு வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின்
அங்கங்களுக்கும் பொட்டு வைத்து,
துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுக்க
வேண்டும்.
கன்றுக்கும் தரவேண்டும். இந்த நேரத்தில் பசுவை மாடு என்று பெண்கள் சொல்லவே கூடாது.
பிறகு தூபதீப ஆராதனை செய்து வீட்டில் வசிக்கப்போகும் பெண் கையில்
காமாட்சி தீபத்துடன் கணவனோடு பசுவை உள்ளே அழைக்க வேண்டும். பெண்கள் அமைதியாக
இருக்க வேண்டும். இப்போது முக்கிய தெய்வ வழிபாட்டுடன் கிரகப்பிரவேச பூஜைகள்
நடத்தப்பட வேண்டும். கணவன்- மனைவி மாலை அணிந்து அமர்க.
வானுலகும் மண்ணுலகும் வாழ மறை
வாழப்பான்மை தரு செய்ய தமிழ்ப்பார்மிசை
விளங்க ஞான மத ஐந்துகர மூன்று விழி
நால்வா யானை முகனைப் பரவி அஞ்சலி
செய்கிற்பாம்
– விநாயகரை வணங்கிய உடன்,
விச்சின்ன அக்னி சந்தானம்
– என்ற விதிப்படி
ஐந்து காசுகளைத் தாம்பூலத்தில் கணவன் வைத்துக்கொண்டு மனைவி அர்க்கியம் (நீர் விட)
விட வந்திருக்கும் வேத பண்டிதரிடம் தரவேண்டும். இது எதற்காக எனில் புதிதாகக் கட்டிய
வீட்டில் முன்பு செய்யாத அக்னி காரியங்கள் விட்டிருந்தால் புதுப்பித்தல்.
மூன்று கலசங்கள் விநாயகர்+லட்சுமி+நவக்ரகம். நவக்ரஹ கலசங்கள் 9 தனியாகவும்
பக்கவாட்டில் வைக்கலாம். மூன்று நுனி இலைகளில் நெல் அல்லது கோதுமை பரப்பி வைத்து
அதன் மேல் மூன்று இலைகளைப் போட்டு பச்சை அரிசி போட்டு கலசம் வைக்க வேண்டும்.
அதற்கு துணி, மலர்போட்டு முறைப்படி அலங்கரிக்க வேண்டும்.
கிழக்கு முகமாக எஜமானர் மனைவியுடன் அமர வேண்டும். பிறகு, கையில் பவித்ரம்.அணிந்து
கொண்டு கலச பூஜையை பண்டிதர் மந்திரம் ஓதி செய்யும் போது மலர் போட்டு வணங்க
வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து அதில் உள்ள அக்னி குண்டத்தில் இட வேண்டும்.
இந்த வழிபாடு தொடங்கும் முன் அக்னியை அதன் மேடையில் பண்டிதர் உபதேவதைகளை
திக்பாலகர்கள், துர்கை, விநாயகர், நட்சத்திர தேவதா, அபயங்கரர் வாஸ்து உள்பட வர்ணித்து
பூர்வாங்க பூஜை செய்வார். நெய்,
நவசமித்துக் குச்சிகளாலும் யாகக் கூட்டுப் பொருட்களாலும் வேத மந்திரங்களால்
கிரகப்பிரவேச யக்ஞம் நடத்தப்படல் வேண்டும்.
ஓம் கம் கணபதியே நம. சுவாகா
ஓம் வக்ர துண்டாய
ஹீம் நமோ ஏரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய
சௌபாக்யம் தேகிமே சுவாகா.
என்றும் நவக்கிரகங்களை அவர்களுக்குரிய
மந்திரங்களால்
ஓம் ஆதித்யாய சுவாகா,
ஓம் சோபாய நம சுவாகா
ஓம் மங்களாய சுவாகா
ஓம் புதாய சுவாகா.
ஓம் ப்ருகஸ் பதியே சுவாகா,
ஓம் சுக்ராய சுவாகா,
ஓம் சனீஸ்வராய சுவாகா,
ஓம் ராகுவே சுவாகா,
ஓம் கேதுவே சுவாகா
– என்று கூறி யாகப் பொருளை அக்னியில் இடலாம்.
லட்சுமி ஹோமம்-வெட்டிவேர்,
வில்வப்பழம், மஞ்சள், தாம்பூலம் இவற்றாலும் அஷ்ட திரவியக் கலவையாலும் ஓமம் செய்தல்
வேண்டும்,
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியை கமல தாரிண்யை சிம்ம வாகின்யை பவாயை சுவாகா-
என்று சௌபாக்கிய லட்சுமியையும்,
ஓம் நம: கமலவாசின்யை என்று ஸ்வர்ண லட்சுமியையும்,
ஓம் உனபதுமாம் கீர்திச்ச
மணினா சக என்று குபேர லட்சுமியையும் வழிபட்டு,
அக்னி பூஜை நடத்தி வாஸ்து
பகவானையும் அவரது காயத்ரியால் யக்ஞ முறை செய்து இறுதியாக பூரண ஆகுதி என்ற யாக
முடிவுறல் நிகழ்வை நடத்தி தூபதீப நிவேதனம் செய்து ஆரத்தி காட்டி வாசற் படிக்கு நிலை
பூஜை செய்து ஆரத்தி செய்தல் வேண்டும்.
சில குடும்பங்களில் நிலைப்படி பூஜையை பசு உள்ளே வருமுன் செய்வார்கள். விதிப்படி
செய்வதானால் அக்னியில் யாகப் பொருள் இட்டு மகாலட்சுமியை அழைத்த பிறகே படி
பூஜை உத்தமம் ஆகிறது. நிலைவாசல்
தேவதைகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்து வைக்கலாம். அடுப்படியில் பால்
காய்ச்சுமிடத்தில் அன்னபூரணியை பூஜை செய்க.
பூரண ஆகுதி முடிந்ததும் அனைவருக்கும் ஆரத்தி பிரசாதம் கொடுக்கலாம்.
அஷ்டதிரவியம் என்ற எட்டுவகை பிரசாதம் கொடுத்த பின் மூன்று கலசங்களில் உள்ள நீரை
முதலில் வைக்கப்பட்ட வருண கும்ப கலசநீருடன் சிறிது கலந்து வீடு முழுவதும் “ஓம் கங்கேச
யமுனே சைவ கோதாவரி
சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே
அஸ்மின் சின்னிதிம் குரு” என்று கூறி
தெளிக்க வேண்டும்.
ஒன்பது செங்கற்கள் அல்லது 4-ஐ வைத்து பூ சந்தனம் குங்குமம் வைத்து புதிய பால்
பாத்திரத்தில் பொட்டு வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்த பின்
கைகூப்பி வணங்கவும். கிரகப்பிரவேசம் நடத்தப்படும் இடத்தில் சாமி படத்தின்
முன்பாக காய்ச்சிய பாலை வைத்து கணபதி, குலதெய்வம், இஷ்ட தெய்வம், லட்சுமி,
சரஸ்வதியை நினைத்து நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.
மிகப்பெரிய வீடு கட்டினாலும் சிறிய வீடு
கட்டினாலும் கிரகப்பிரவேசம் முடிந்ததும்
இதைச் செய்ய வேண்டும். இக்காலத்தில் இந்த வழக்கத்தை எல்லோரும் விட்டு விட்டார்கள்.
பூஜையில் வைக்கப்பட்ட மூன்று கலச
நீரையும் மாடிப்பகுதியில் ஈசான்ய
மூலையில் வேதபண்டிதர் உறவினர் நின்று கொண்டு வீட்டின் எஜமானர் மனைவியுடன் கீழே
ஈசான்யத்தில் நிற்கச் செய்து அப்படியே தாரையாக ஊற்ற வேண்டும்.
அவர்களுக்குக் கலசநீரை அபிஷேகம்
செய்வதால் சர்வ தோஷங்களும் விலகி
லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அடுத்ததாக பால் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி முதலில் எஜமானர் மனைவியோடு அருந்த
வேண்டும். தொடர்ந்து உறவினர், நண்பர்கள், பெண் கொடுத்தோர், பிள்ளையை கொடுத்தவர்கள்
வாழ்த்துரையோடு சீர்வரிசை மொய், பொருட்கள் கொடுப்பார்கள். அவற்றை தட்டில் வைத்து
கொடுக்கலாம்.
தொடர்ந்து வாழ்த்துரை வழங்குவதும் மாலை அணிந்து கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு
மங்கள ஆரத்தியை எடுக்கச் சொல்வது வழக்கம். அடுத்ததாக வாஸ்து தோஷங்கள் விலக,
பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் தற்கால வழக்கப்படி சுற்றி (திஷ்டி விலக) விட்டு
வாசலில் உடைக்க வேண்டும்.
பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர்
வீட்டிற்கு சம்மந்தியாக வந்திருப்பவர்கள் சீர் கொண்டு வந்திருக்கையில் அவர்களுக்கு
தாம்பூலம், பதில் மரியாதை செய்வதும், சுமங்கலிகளுக்கு தாம்பூலம் மஞ்சள், குங்குமம்
கொடுத்து வாழ்த்துப் பெறவும் அவசியமாக மறக்காமல் செய்தல் வேண்டும். கிரகப்பிரவேசம்
செய்த வீட்டில் அந்த நாள் இரவு மனைவி விளக்கு ஏற்றி வைத்து துளசி துதி, மகாலட்சுமி
மந்திரங்களைப் படித்தல் வேண்டும். வீட்டில் வருடத்திற்கு ஒரு முறை
உங்கள் விருப்ப தெய்வ மந்திரங்களைக் கூறி யக்ஞ பூஜை செய்யுங்கள். பித்ருக்கள் படத்தைத்
தனி அறையில் வைத்து ஆராதிக்கலாம்.
சாமி படங்களோடு சேர்த்து வைத்தால் தெய்வ சாந்நித்ய சக்தி அகன்று புது வீட்டில் இடர்கள்
உருவாக வாய்ப்பு உண்டு.
கிரகப்பிரவேச காலத்தில் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, குபேரன், பெருமாள், லட்சுமி படங்களை
வைத்து வழிபடலாம். விருப்பப்படி எல்லாம் யந்திரங்களை வைத்து வழிபடுதல் வேண்டும்.
கிரகப்பிரவேச காலத்தில் யாகம் செய்யும் போது மோகன கணபதியை அக்னியில் ஆகுதி
செய்து வழிபட்டால் பெண் திருமணத்தடை விலகி சீக்கிரம் கைகூடும். கல்வி விருத்திக்கு-
ஹயக்ரீவ ஹோமம் சூன்யங்கள் அகன்று நிம்மதி பெற-ஆஞ்சநேயர் மூலமந்திர முறை. வீடு
கட்ட, கடன் ஒரு ஆண்டுக்குள் தீர-அங்காரக மங்கள மந்திர ஹோமம்.
அரசாங்க நன்மை, பணி உயர்வு பெற- இந்திர பூஜை மந்திரம்.
குழந்தை பாக்கியம் உங்களுக்கே தடையாக இருந்தால்-அஸ்வினி தேவர்களை நினைத்து
ஹோமம். இன்னொரு வீடு யோகம் வர பூமிலாப வாஸ்து முறை ஹோமம்.
வீட்டுக்குள் குடிபுகுந்ததில் இருந்து ஐஸ்வர்யமும் பொருளும் சேர்ந்திட சௌபாக்ய திரவ்ய
லட்சுமி ஹோமம், தொழில் உயர்ந்து வர-குபேர சிந்தாமணி மந்திர ஹோமம் என்று இலகு
முறையில் சேர்த்து செய்து விட்டால் பலன் விரைவாகவும் இரட்டிப்பாகவும் கிடைக்க
காணலாம்!!!











