கருவறையில் நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச்சுடர் அசைந்தாடுகிறது. இந்த அதிசய கோயில் ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் வாடபல்லியில் உள்ளது.
கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு அகத்தியர் வந்த போது வானில் அசரீரி ஒலித்தது. “அகத்தியரே! நதிகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் நரசிம்மரின் சிலை ஒன்று உள்ளது. அதைப் பிரதிஷ்டை செய்த பிறகு உமது தீர்த்த யாத்திரையைத் தொடருங்கள்” என்றது.
அதன்படி அகத்தியரும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். நாளடைவில் இங்கு வழிபாடு இல்லாமல் போகவே சிலை மண்ணுக்குள் புதைந்தது. நான்காம் நுாற்றாண்டில் ரெட்டி ராசுலு என்பவரால் நரசிம்மரின் சிலை மீண்டும் வெளிப்பட்டது. 1377ல் கோயில் கட்டப்பட்டு வழிபாடு தொடங்கியது.
சுவாமி சிலையில் இருந்து மூச்சு வெளிப்படுவதை பூஜை செய்த அர்ச்சகர் உணர்ந்தார். அதை சோதிக்க மூக்கின் அருகில் விளக்கை பிடித்த போது சுடர் அசைந்தது. அதே நேரம் சுவாமியின் பாதத்தில் ஏற்றிய தீபம் அசையாமல் இருந்தது. இன்றும் விளக்குகள் இப்படி எரியும் அதிசயத்தை நாம் காணலாம்.
ஆந்திராவிலுள்ள நல்கொண்டா, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டத்தினர் இங்கு வழிபட்ட பிறகே மற்ற நரசிம்மர் தலங்களுக்குச் செல்கின்றனர். ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சுதை சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளன. மகாலட்சுமி தாயார்
தனி சன்னதியில் இருக்கிறார். கருடன், அனுமன் வாகனங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளன.
ஆன்மிக உபன்யாசகரான முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் 1992ல் யாகம் நடத்தினார். அதன் பின் இக்கோயில் பிரபலமானது. பஞ்சநரசிம்ம தலங்களில் இதுவே முதல் கோயில். அளவில் சிறியது என்றாலும் உயிரோட்டமுள்ள நரசிம்ம தரிசனத்தால் பக்தர்கள் பரவசத்தில் மூழ்குகின்றனர்.
வாடபல்லி என்னும் இக்கிராமத்தில் கிருஷ்ணா, முசி நதிகள் இணைந்து எல் வடிவில் உள்ளன. மட்டபல்லி நரசிம்மர் கோயிலில் இருந்து ஹுசூர் நகர் வழியாக குண்டூர் செல்லும் ரோட்டில் 100 கி.மீ., கடந்தால் மிரியாலக்குடா என்னும் ஊர் வரும். அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ., துாரத்தில் கோயில் உள்ளது.
எப்படி செல்வது: விஜயவாடாவில் இருந்து 167 கி.மீ.,
விசேஷ நாள்: நரசிம்ம ஜெயந்தி, ஸ்ரீராம நவமி
நேரம்: காலை 7:00- 11:00 மணி; மாலை 6:00 – 7:30 மணி
தொடர்புக்கு: 99088 04566
அருகிலுள்ள தலம்: மட்டபல்லி நரசிம்மர் 102 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 12:00 மணி; மாலை 4:00 – 7:30 மணி
தொடர்புக்கு: 040 – 2345 0444











