இரண்டு பேர் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
மனிதன் 1 : எல்லாரையும் கடவுள் வசதியாக எல்லாம் செல்வங்களோடு வைத்திருக்கிறான். ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன். இதுவரை எதுவும் எனக்கு தந்ததில்லை” என்று சலித்துக் கொண்டான்.
மனிதன் 2 : நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய சுண்டுவிரலை வெட்டி எனக்கு தந்துவிடு.
மனிதன் 1 : இல்லை முடியாது
மனிதன் 2 : பத்து லட்சம் தருகிறேன். உன்னுடைய ஒரு காலை வெட்டி எனக்கு தந்து விடு.
மனிதன் 1 : இல்லை முடியாது.
மனிதன் 2 : நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன். உனது இரு கண்களையும் எனக்கு தந்துவிடு.
மனிதன் 1 : நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களையும் கொடுத்தாலும், என் கண்களை கொடுக்க முடியவே முடியாது.
மனிதன் 2 : இறைவன் உனக்கு எவ்வளவு விலை உயர்ந்த செல்வங்களை தந்திருக்கிறான். ஆனால் அதற்கு நன்றி செலுத்தாமல் , இதுவரை எனக்கு எதுவும் தந்ததில்லை என்று சலிக்கின்றாயே?
எவருக்கு எந்த சூழ்நிலையிலும் நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டுமோ, அவர்தான் இறைவன். பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார். கடலில் உள்ள திமிங்கலத்திற்கு ஒரு நாளைக்கு 33 டன் அதாவது, 36,960 கிலோ மீன்களை உணவு வழங்குகிறார்.
உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள். இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றார். இன்னும் சிலரை நோய் நொடிகளால் சோதிக்கின்றார். இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார். ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்.
நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள், என்று !!! கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று !!!
இறைவனுக்கு நன்றி செலுத்து. நீ உனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றாய். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்து. நீ உனது தொழிலை நோக்கி செல்கின்றாய். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல் அலைகின்றனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்து. நீ உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றாய். எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி போராடுகின்றனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்து. நீ இன்னும் மனிதப் பிறவியில் உயிருடன் இருக்கின்றாய். எத்தனையோ ஜீவன்களுக்கு மனிதப் பிறவி கிடைக்கவில்லை. மனிதப் பிறவியே கிடைத்தவர்களோ, இளம் வயதிலேயே இறந்து விட்டனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்து.நீ நீயாக இருக்கின்றாய். எத்தனையோ பேர், உன்னைப் போல் இருக்க முடியவில்லை.
எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருந்து கொண்டும், பிறரை மகிழ்விததுக் கொண்டும், மறக்காமல், இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இரு.











