திருவனந்தபுரம் அருகில் உள்ளது ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில். இங்குள்ள மூலவர் விக்கிரகம் பலாமரத்தால் ஆனது. இங்கு சிலப்பதிகார சம்பவங்கள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
* கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள திருத்தலம் திருக்கூடலையாற்றூர். இங்குள்ள ஸ்ரீநர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டு அம்மன் சந்நதிகள் அமைந்துள்ளன. ஸ்ரீஞானசக்தி அம்பாள் சந்நிதியில் குங்குமமும் ஸ்ரீபராசக்தி சந்நிதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுகின்றன.
* சென்னை குரோம்பேட்டையில் உள்ள கணபதிபுரம் ஸ்ரீசெங்கச்சேரி அம்மன் கோயிலில், பெளர்ணமி வழிபாடு வெகு விசேஷம். அன்று மருதாணி இலைகளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் அவற்றை கன்னிப் பெண்களுக்குப் பிரசாதமாகத் தருகின்றனர்.
* தமிழ்நாட்டில் அம்பாள் என்றும், அம்மன் என்றும் வழிபடப்படும் சக்திதேவி, பிற மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களுடன் வணங்கப்படுகிறாள். எந்தெந்த மாநிலங்களில் என்னென்ன பெயர்கள் என்று பார்ப்போம்:
கர்நாடகம் – சாமுண்டி, கேரளம் – பகவதி, ஆந்திரா – சக்தி, காஷ்மீர் – க்ஷீரபவானி, மகாராஷ்டிரா – துலஜாபவானி, குஜராத் – அம்பாஜி, பஞ்சாப் – ஜ்வாலாமுகி, வங்காளம் – காளி, உத்திரப்பிரதேசம் – விந்தியாவாசினி, அசாம் – காமாக்யா.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில், படவேடு கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீரேணுகாம்பாள் திருக்கோயிலில் அம்மை, கண் நோய் முதலான எந்த நோயாக இருந்தாலும், அம்பாளுக்கு மஞ்சள் காப்பு செய்து வழங்கப்படும் தீர்த்தத்தைப் பருகி வந்தால், பலன் உண்டு. இதேபோல், நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவோர்,
அம்மனை வழிபட்டு, ‘மதில் மேல் விடுதல்’ செய்தால் (கோழியை கோயிலின் மேற்பகுதியில் வீசுதல்) நோய் தீரும்; நிம்மதி பெருகும் என்பது நம்பிக்கை!











