புதன்கிழமை பிரதோஷம் புத்திசாலி பிள்ளைகளை பெற வரமருளும் சிவ பெருமான் சிவகுமரன் முருகனைப் போல பிள்ளை வேண்டுமா?
புதன்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. புதன் பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்தால் சிவகுமரன் முருகனைப்போல பிள்ளைகள் வாய்ப்பார்கள்.
சுபகிருது வருடம், மார்கழி 20, ஜனவரி 04ம் நாளான இன்று புதன்கிழமையன்று புதன் பிரதோஷம் ஆகும். புதன்கிழமை நாளில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது நன்மை தரக்கூடியது.
இன்று மாலையில் சிவனின் கோவிலுக்கு சென்று வணங்குவதும், அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்குவதும் பல நன்மைகளை வழங்கும். இன்று அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கிக் கொடுத்து, சிவனை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும்.
வீட்டில் சுபிட்சம் நிலவும். அதிலும் குறிப்பாக, புதன் பிரதோஷத்தன்று, அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித் தந்தால், புத்திசாலியான குழந்தைகள் பிறப்பார்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கும்.
☘️
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன் செல்வத்தையும் அறிவையும் வழங்கக்கூடியவர். புதன் பிரதோஷத்தன்று விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும்.
☘️
செல்வம் என்பது பணத்தையும் சொத்தையும் மட்டும் குறிப்பதல்ல, 16 வகை செல்வங்கள் உண்டு. அதில் முக்கியமானவை என்றால், அறிவுச் செல்வம் என்று சொல்லலாம். 16 செல்வங்களைப் பெற புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாடு உகந்தது என்று கூறப்படுகிறது. புதன்கிழமையில் வரும் பிரதோஷம் நற்பலன்களைத் தந்தருளக்கூடியது.
☘️
இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்வதும், பிரதோஷ பூஜையில் கலந்துகொள்வதும் நலன்களை பயக்கும். புதன் கிழமையில் வரும் பிரதோஷ விரதம் இருப்பவர்கள், செவ்வாய்கிழமை மாலையிலேயே சிவனை வழிபட்டு ‘ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும். பின்னர் இரவு எளிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
☘️
புதன்கிழமை காலையில் குளித்து, சிவாலயத்திற்கு சென்று சிவ பெருமானையும், நந்தி பகவானையும் வழிபட்டு, புதன் கிழமை பிரதோஷ விரதம் இருக்கின்றேன், என் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை செல்வ தடைகளும் காணாமல் போக வேண்டும் என வேண்டி கோயிலில் அமர்ந்து 108 முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
☘️
இந்த மந்திரத்தை நந்தி பகவானுக்கு அருகில் அமர்ந்து உச்சரிக்கவும். பிரதோஷ வேளையில் சிவ பெருமானுக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையை காண்பது புண்ணியம் அளிக்கும்.
நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை அணிவித்தால் தொழில் தடைகள் நீங்கும். சிவ வழிபாடு செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்வது, சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் நல்லது.
☘️
கஷ்டங்களையெல்லாம் போக்கி நல்வாழ்வை அருளும் சிவனின் அருட்கடாட்சத்தைப் பெற வேண்டுபவர்கள், பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். புதன் கிழமையன்று வரும் பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.











