அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் – புரவச்சேரி (சிக்கல்~பொரவச்சேரி)
இராஜ சிற்பியின் கலை நுணுக்கத்தில் இந்த முருகனின் இடது புறங்கையில் ஓடும்
பச்சை நரம்பினை இன்றும் நாம் காணலாம்.
மூலவரான ஆறுமுகப்பெருமான் சிற்பத்தின் சிறப்பு முழுமூர்த்தத்தின் (திருவாச்சி
உள்பட) எடை முழுவதையும் ஊன்றி இருக்கும் மயிலின் கால்கள் தாங்கி இருக்கிறது.
இது போன்ற சிற்பத்தை காண்பதரிது.
மற்ற இரு இடங்களை (எட்டுக்குடி, எண்கண்) விட இங்குள்ள மூர்த்தி பெரியது
என்பதாலும், இங்குள்ள சன்னதியின் அமைப்பின் காரணமாக நாம் மிக அருகில் சென்று
மயிலின் கால் நகம் முதல் முருக பெருமானின் திருஉருவத்தை, அவர் கைகளின் நரம்பு
உள்பட தரிசனம் செய்யலாம் .
நாகப்பட்டினம் அருகிலுள்ள சிக்கலில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி “சில்ப முனிவர்”
இருந்தார். தேவலோகத்துச் சிற்பியான விஸ்வகர்மாவே பூவுலகம் வந்துவிட்டாரோ
என்று நினைக்கும்படியான திறமைமிக்கவர் அவர். முருக பெருமான் மீது மிகுந்த பக்தி
கொண்ட அவர் சதா சர்வ காலமும் “ஓம் சரவணபவ” என்ற திருமந்திரத்தை
உச்சரித்தவாறு இருந்தார்.
சிற்பிக்கு ஒருநாள் சோழ அரசன் முத்தரசனிடம் இருந்து ஆறுமுக கடவுளுக்கு ஓர்
அற்புதச் சிலை வடிக்க அழைப்பு வந்தது.
சொக்கவைக்கும் அழகுடன் சுப்ரமண்யனின் சிலையை வடித்தார் சிற்பி. அழகுக்கு
இலக்கணம் முருகன் என்பார்கள். அந்த இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டுபோல்
அமைந்திருந்தது சிற்பி வடித்திருந்த முருகன் சிலை. மலைத்துப்போனார்கள் மக்கள்!
ஆறுமுகம் பன்னிரண்டு கையும் வேலும்… அலங்கார ஆபரணம் அணிந்த மார்பும்…’
என்று கந்தன் துதி ஒன்று வர்ணிப்பது போன்ற அழகு ரூபனாக அமைந்திருந்த அந்தச்
சிலையை தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியான பொரவச்சேரி எனும் “பொருள் வைத்த
சேரி” யில் இருந்த ஆலயத்தில் ஸ்தாபித்து குடமுழுக்கு நடத்தினான் மன்னன்.
மனம் குளிர்ந்தார்கள் மக்கள். ஆனால் மன்னனோ இது போல இன்னொரு சிலையை செய்து விடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான்.
சிற்பி மனம் தளராமல் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றான். வேதனையோடு வேலவனை வேண்டி தன் இடது கையால் கடுமையான முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தான்.
சிற்பவேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அந்நேரத்தில் வர அதை “எட்டிப்பிடி’ என உத்தரவிட்டான்.
காவலர்கள் மயிலை பிடித்தனர். அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் “எட்டிக்குடி’ என ஆகியுள்ளது.
எட்டுக்குடியில் மற்றொரு அழகிய ஆறுமுகனை வடிவமைக்கக் கண்டு மனம் பொறுக்காத முத்தரச சோழன் சிற்பியின் இரு கண்களையும் குருடாக்கினான்.
வலக்கை கட்டை விரலும், இரு கண்களும் இன்றி சிற்பி இங்கு (எண்கண்) இருந்த கருங்கல்லில் ஆறுமுகன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் வடிவமைத்து ஆறுமுகனுக்கு கண்திறக்கும் தருணத்தில் அருகில் உதவி செய்த
சிறுமியின் கையில் உளி பட்டு ரத்தம் பீரிட்டு சிற்பியின் கண்களில் பட்டு சிற்பியின் கண்கள் பார்வை பெற்றது. முருகனே சிறுமியாக வந்து சிற்பிக்கு அருள் புரிந்தார்.
சிக்கல்(பொரவச்சேரி), எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் ஆறுமுகப்பெருமான் சிலைகள் மூன்றும் ஒரே சிற்பியினால் வடிக்கப்பெற்றது.
சிக்கல் முருகன் கோவிலில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பொரவச்சேரி அருள்மிகு கந்தசாமி திருக்கோவில்.
வாருங்கள் கந்தனை தரிசனம் செய்வோம்!!!
ஆலய தொடர்பிற்கு:
J. பாலசுப்பிரமணிய குருக்கள்.
04365-246281 / 944 349 2760.










