பொன்னியின் செல்வன் நாவலில் மந்தாகினி தேவி, ஏறிக் குதித்து உயிர் துறக்கப் பயன்பட்ட சோழர் கால கலங்கரை விளக்கம் இப்போது எந்த நிலையில் இருக்கிறது? பூங்குழலி அடிக்கடி செல்லும் குழகர் கோவிலின் நிலை என்ன?
இந்தக் கலங்கரை விளக்கம் முதலாம் பராந்தகச் சோழனால் (கி.பி. 907-953) கட்டப்பட்டதாக பலரும் கருதினாலும், அதற்கு முன்பே இது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
“அதில் உள்ள செங்கல் கற்கள், கட்டப்பட்ட முறை ஆகியவற்றை வைத்துப் பார்த்தால், அது பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம்” என்கிறார் இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பு தொல்லியலாளரான டி. சத்தியமூர்த்தி.
‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதுவதற்கு முன்பாக கல்கி இந்த இடத்தை வந்து பார்த்தபோது, அந்தக் கலங்கரை விளக்கத்தின் மூன்றில் இரண்டு பகுதி பாழடைந்த நிலையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
“அதன் பெரும் பகுதி எஞ்சியிருந்தது ஆவணங்களில் பதிவாகியுள்ளது” என்கிறார் டி. சத்தியமூர்த்தி. 1960களில் வீசிய புயலில் முற்றிலுமாக அந்தக் கலங்கரை விளக்கம் அழிந்துபோய், அடிப்பகுதி மட்டும் எஞ்சியுள்ளது.
குழகர் கோவிலைப் பொறுத்தவரை, 1,200 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரமூர்த்தி நாயனார் பாடியதைப் போல “கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர், அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே. (இந்தக் கோடிக்கு வந்து பயங்கரக் காட்டிலே தனியே கோயில் கொண்டிருப்பதேன்? இக்கொடியேனுடைய கண்கள் இந்தக் காட்சியையும் காண நேர்ந்ததே!)”.
குழகர் இப்போதும் தனிமையில்தான் இருக்கிறார்.











