கேள்வியாளர்: அழகு உள்ளுணர்வு (மனம்) சார்ந்ததா அல்ல புறம் சார்ந்ததா ( பொருள்) சார்ந்ததா?
நீங்கள் அழகான ஏதோ ஒன்றைப் பார்க்கிறீர்கள், பால்கனியிலருந்து ஒரு நதியை, அல்லது நீங்கள் கந்தலான உடையில் இருக்கும் ஒரு குழந்தை அழுவதைப் பார்க்கிறீர்கள்.
நீங்கள் உனர்திறன் அற்றவராக இருப்பீர்கள் என்றால், நீங்கள் உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் விழிப்புணர்வு கொள்ளாவிட்டால், அப்போது நீங்கள் வெறுமனே கடந்து செல்கிறீர்கள், மேலும் அந்த நிகழ்வு உங்களுக்கு சிறிதளவே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஒரு பெண் நமக்கருகில் தலையில் சுமையை ஏற்றிக்கொண்டு நடந்து வருகிறாள். அவளின் உடைகள் அழுக்காக உள்ளன, அவள் பசியோடும் சோர்வாகவும் இருக்கிறாள்.
நீங்கள் அவள் நடையின் அழகைக் கவனிக்கிறீர்களா, அல்லது அவளின் வெளிப்புறத் தோற்றம் குறித்த உணர்வு உங்களுக்கு உள்ளதா?
அவள் சேலை எவ்வளவு அழுக்காக இருந்தாலும் நீங்கள் அதன் வண்ணத்தைப் பார்க்கிறீர்களா
உங்களைச் சுற்றி இதுபோன்ற புறம் சார்ந்த தாக்கங்கள் உள்ளன, மேலும் நீங்கள் உணர்திறன் அற்று இருப்பீர்கள் என்றால், நீங்கள் அவற்றை பாராட்ட மாட்டீர்கள், இல்லையா?
உணர்திறனுடன் இருப்பது என்பது அழகானது என்று அழைக்கப்படுபவைகளை மட்டுமே கவனிப்பது கிடையாது, மாறாக அசிங்கமானது என்று அழைக்கப்படுவதையும்
கவனிப்பதாகும்.
அந்த ஆறு, பசுமையான வயல்கள், தூரத்தில் உள்ள மரம், மாலைநேர மேகங்கள் – இவைகளை நாம் அழகானவைகள் எனக் கூறுகிறோம்.
அழுக்கான, அரைப் பட்டினியோடு இருக்கும் கிராம மக்கள், பெரிதும் அழுக்கான இடத்தில் வசிக்கும் மக்கள், அல்லது மிகக்குறைந்த அளவு சிந்திக்கும் திறன் கொண்ட, மிகக்குறைந்த உணர்திறன் கொண்ட மக்கள் – இவற்றையெல்லாம் நாம் அசிங்கமானவைகள் என்கிறோம்.
இப்போது, நீங்கள் கவனித்தீர்கள் என்றால், நம்மில் பெரும்பாலானோர் அழகானவைகளைப் பற்றிக்கொண்டும் அசிங்கமானவைகளைவிட்டு விலகியும் இருக்கிறோம் என்பதைக் காண்பீர்கள்.
ஆனால், அசிங்கமானவைகள் எனக் கூறப்படுவதன் மீதும் அத்துடன் அழகானவைகள் எனக் கூறப்படுவதன் மீதும் இரண்டின் மீதும் உணர்திறன் கொண்டு இருப்பது முக்கியம் இல்லையா?
இந்த உணர்திறன் குறைபாடே, அதுதான் நம்மை வாழ்க்கையை அழகானவைகள் மற்றும் அசிங்கமானவைகள் எனப் பிரித்துப் பார்க்க காரணமாக உள்ளது.
ஆனால் நாம் மனம் திறந்து இருந்தால், எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தால், அழகானவைகள் மற்றும் அசிங்கமானவைகள் இரண்டின் மீதும் உணர்திறன் கொண்டு இருந்தால், அப்போது அவைகள் இரண்டுமே அர்த்தங்கள் நிறைந்தது என நீங்கள் காண்பீர்கள்.
மேலும் அந்த ஞானம் வாழ்க்கைக்கு வளமையைத் தருகிறது.
ஆகவே, அழகு அகம் சார்ந்ததா அல்லது புறம் சார்ந்ததா,
நீங்கள் குருடராக இருந்தால், நீங்கள் காது கேளாதவராக இருந்து எந்த இசையையும் கேட்க இயலாதவரெனில், நீங்கள் அழகில்லாமல் இருப்பீர்களா?
அல்லது அழகு என்பது மனதிற்கு உள்ளாக இருக்கும் ஏதோ ஒன்றா?
நீங்கள் உங்கள் கண்களால் பார்க்க இயலாமல் இருக்கலாம், நீங்கள் உங்கள் காதுகளால் கேட்க இயலாமல் இருக்கலாம்;
ஆனால் திறந்த மனதுடன் இருக்கும்
நிலையை, அனைத்திற்கும் உணர்திறனுடன் இருக்கும் நிலையை அனுபவிப்பது இருக்குமேயானால், நீங்கள் உங்களுக்குள் நிகழும் அனைத்து குறித்தும், ஒவ்வொரு எண்ணம் குறித்து, ஒவ்வொரு உணர்வு குறித்து விழிப்புணர்வு கொள்வீர்கள் எனில் – அதிலும் அழகு இல்லையா?
ஆனால் நீங்கள் கவனியுங்கள், அழகு நமக்கு வெளியே இருக்கும் ஏதோ ஒன்று என நாம் நினைக்கிறோம்.
ஆகவேதான் நாம் ஓவியங்களை வாங்கி சுவற்றில் மாட்டுகிறோம்.
நாம் அழகான சேலையை, சூட்டை, டர்பனை உடைமையாக்கிக்கொள்ள விரும்புகிறோம்.
நாம் நம்மைச் சுற்றி அழகான பொருட்கள் சூழ்ந்து இருக்கும்படி விரும்புகிறோம்.
ஏனெனில் வெளிப்புறமான நினைவுபடுத்தும் அழகான பொருட்கள் இல்லாமல் நாம் மனதின் உட்புறமாக எதையோ இழந்துவிடுவோமோ எனப் பயப்படுகிறோம்.
ஆனால், நீங்கள் வாழ்க்கையை, நம் வாழ்வின் முழு செயல்முறையை உள்ளார்ந்தது மற்றும் வெளிப்புறமானது எனப் பிரிக்க முடியுமா?
இது ஒரு ஒற்றைச் செயல்முறை அல்லவா?
புறம் சார்ந்த விஷயம் இல்லாமல் உள்ளார்ந்த விஷயம் இல்லை, உள்ளார்ந்த விஷயம் இல்லாமல் புறம் சார்ந்த விஷயம் இல்லை.
ஜே கிருஷ்ணமூர்த்தி
Book – Life Ahead











