சுவாமி ரமணானந்தரின் ஆராதனை ஆச்ரமத்தில் அமைந்துள்ள அவரது சமாதியில் இன்று (18/12/2024) சிறப்பான முறையில்
நடைபெற்றது.
பகவான் ரமண மகரிஷிகள் கந்தாச்ரமத்தில் இருந்த சமயத்தில் வேங்கடராமன் என்ற சிறுவன் பகவானுடன் தங்கினான். பகவான்
அச்சிறுவனுக்கு உணவளித்து அவனைத் தம்மருகில் படுக்க வைத்து தூங்கச் செய்தார்.
மறுநாள் காலை அந்தச் சிறுவனை அருகிலுள்ள ஊற்றுக்கு அழைத்துச் சென்று அவனது பற்களைத் தேய்த்து விட்டு பின்னர் அவனை அவனது அத்தையிடம் “உன்னுடைய பையனை எடுத்துக்கொள். அவன் பார் நன்றாக இருக்கிறான்” என்று கூறி ஒப்படைத்தார்.
நன்றாக அவனைக் கவனித்துக் கொண்ட பகவான் அதேசமயத்தில் அவன்மீது கண்டிப்பாகவும் இருந்தார். அதை இந்த சிறு நிகழ்ச்சி வாயிலாகக் காண்போம்:
கந்தாச்ரமத்தில் பகவானுடைய அரவணைப்பில் நொண்டி என்ற குரங்கும் இருந்தது. அது அங்கிருந்த எல்லோருக்கும் செல்லப் பிராணியாக இருந்தது. மற்றவர்களுக்குக் கொடுக்கும் உணவையே அந்தக் குரங்கிற்கும் கொடுக்க வேண்டுமென்று பகவானுடைய ஆணை. அவன் இல்லாத சமயத்தில் அவனது பங்கு அங்கிருக்கும் ஜன்னலின் மேல் வைக்கப்படுவது வழக்கம்.
ஒருசமயம் பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புப் பண்டங்கள் வழங்கப்பட்டது. ருசித்து சாப்பிட்ட சிறுவன் தன்னுடைய பங்கு தீர்ந்தபின் ஜன்னலோரம் சென்று நொண்டியின் பங்கை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். திடீரென்று வந்த நொண்டிக் குரங்கு சினமடைந்து சிறுவனின் கன்னத்தில் அறைந்தது.
அழுது கொண்டிருந்த சிறுவனை மற்றவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். அங்கே வந்த பகவான் நடந்ததை அறிந்து, “உனக்கு இது வேண்டியதுதான். நொண்டியின் பங்கை நீ ஏன் எடுத்தாய்? தேவையானதைச் சாப்பிட்டு விட்டாய். அதோடு திருப்தியடைந்திருக்க வேண்டும்” என்றார்.
சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக பகவான் கூறிய அறிவுரைகளை சிறுவனும் அமைதியாகப் புரிந்து கொண்டான்.
“மற்றவருடைய பொருட்களைத் தொடாதே! உன்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு திருப்திப்படு. உன்னிடம் இருப்பவைகளை மற்றவர்களுக்கு சமமாகப் பங்கிட்டுக் கொடு. எளியோர்களுக்கு உதவி செய். உனக்கு முன்னால் ஏதாவது தவறு நடந்தால் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்காதே. முடிந்தால் சரிசெய். குறைந்தது நீதிப் பக்கம் பேசு.” இதுதான் வேங்கடராமன் அந்த நாளில் மகரிஷி கூறியதிலிருந்து புரிந்து கொண்டது.
பகவானின் அரவணைப்பும் அறிவுரைகளும் கிடைக்கப்பெற்ற பாக்கியசாலியான சிறுவன் வேங்கடராமன் பகவானின் இளைய சகோதரர் நிரஞ்சனானந்த சுவாமியின் மகனாவார்.
வெங்கிட்டு என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர் 1953 முதல் 1995 ஆம் ஆண்டுவரை ரமணாச்ரமத்தின் தலைவராக இருந்தார். பின்னர் சந்நியாசம் பெற்று சுவாமி ரமணானந்தரானார்.











