நம்முடைய வீட்டில் எத்தனை வளங்கள் இருந்தாலும் செல்வம் பெருக வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இல்லத்தில் செல்வம் பெருக அன்னை மகாலட்சுமியின் அருள் வேண்டும். இறையருள் உள்ள வீட்டில் நிச்சயம் பொன்மழை பொழியும். லட்சுமி தாண்டவம் நடக்கும்.
அட்சய திருதியை நாளில் ஏழைப்பெண் ஒருத்தி இட்ட உலர்ந்த நெல்லிக்கனியைப் பார்த்து மகிழ்ந்த ஸ்ரீ ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினார்.
கேரளா மாநிலம் காலடி என்னும் ஊரில் சிவகுரு- ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்கு பிறந்தவர் ஆதிசங்கரர். இவர் சிறு வயதிலேயே குருகுலத்தில் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார். அந்த காலத்தில் குருகுல வழக்கப்படி யாசகம் எடுத்துதான் உணவு உண்ண வேண்டும். அதன்படி ஆதிசங்கரர் யாசகத்திற்காக புறப்பட்டார்.
சங்கரர் போய் யாசித்த வீடு ஒரு ஏழையின் வீடு. அந்த வீட்டின் முன்பு நின்று, ‘பவதி பிட்சாந்தேஹி’ என்று மும்முறை குரல் கொடுத்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த பெண், அடடா சூரியனைப் போல ஒளிரும் இந்த பிள்ளைக்கு சாப்பிட தர ஒன்றும் இல்லையே என்று நினைத்து வருத்தப்பட்டாள்.
உடனே துவாதசி நாளில் விரதத்திற்காக வாங்கிய நெல்லிக்கனி ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது. பிள்ளையை வெறும் கையோடு அனுப்ப மனது வராமல் ‘ஐயா! தங்களுக்கு இந்த ஏழையின் வீட்டில் இருக்கும் ஒரே ஒரு காய்ந்த நெல்லிக்கனியை தருகிறேன் இந்தாருங்கள் என்று கொடுத்தார்.
அதைப் பெற்றுக்கொண்ட ஆதிசங்கரர், ‘ஏழ்மை நிலையிலும் கூட, தன்னிடம் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் தானமாக தந்துவிட்ட அந்தப் பெண்ணின் குணத்தை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். அந்தப் பெண்ணின் ஏழ்மையை போக்க எண்ணிய ஆதிசங்கரர், அந்த வீட்டின் முன்பு நின்றபடி மகாலட்சுமியை நினைத்து மனமுருக வேண்டினார்.
அப்போது அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் தங்க நெல்லிக்கனிகள், பொன் மழையாகப் பெய்தன. வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனிகள் குவிந்தன. சற்று முன்வரை பரம ஏழையாக இருந்த அந்தப் பெண், மிகப்பெரும் செல்வந்தராக மாறினாள். குடிசை வீடு தங்க வீடாக மாறியது.
இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்தது அட்சய திருதியை நன்னாளில்தான்.
👇கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி பொழிந்த வீடு!










