அருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோவில், ஏர்வாடி
பழைமையான அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் திருக்கோவிலின் முகப்பு. இந்த இடம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பக்கத்தில் உள்ள ஏர்வாடி. இந்த ஸ்தலம் புண்ணிய நதியாம் நம்பி ஆறு ஓடும் பாதையில் இருக்கு.
இந்த திருஸ்தலத்தின் பழையப் பெயர் வீரரவிவர்ம சதுர்வேதமங்கலம். இது சுமார் 1600 வருடங்களுக்கு முற்பட்ட கோவில் என சொல்லபடுகிறது.
நுழைவாயில் மண்டபத்தைத் தாண்டி இருக்கும் உள்புறவாயில். இந்த ராஜக்கோபுரத்திற்கு அடித்தளம் அப்பொழுது இருந்த மன்னர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் படையெடுப்புகளாலோ இல்லை ஆட்சி மாற்றங்களாலோ என்னமோ ராஜக்கோபுரம் மொட்டைக்கோபுரமாக முற்றுப்பெறாமல் இருக்கிறது.
இந்த ஸ்தலத்தின் வரலாறு செவிவழிக்கதையாக நான் கேட்டவை…., சதுர்வேதம் எனப்படும் நான்கு வேதங்களை அடிப்படியாக கொண்ட கோவில் இது.
மேலும் சதுர்வேதங்களையும், சாஸ்திரங்களையும், உபநிடங்களையும் ஓதும் அந்தணர்களுக்கு தானமாக வழங்கி, வழிபாடு நடந்து வந்தது எனவும் சொல்லப்படுகிறது.
இது மிகவும் பழமையானக் கோவில் என்பதற்கு நிறைய சான்றுகள் இருந்தாலும் கோவிலின் நந்தி பீடத்திற்கு கொஞ்சம் மேற்கு பக்கத்தில் உத்திரத்தில் பாண்டிய மன்னர்களின் சின்னமான மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
இங்கே இருக்கிற சின்னம் அவர்களுடைய நேரடி ஆட்சியின் கீழ் இருந்ததற்கான சான்று ஆகும். ஆகையால் இது பாண்டியமன்னர்களால் கட்டப்பட்டு இருக்கலாம். அல்லது புனரமைக்கப்பட்டும் இருக்கலாம்.
மேலும், இதன் காலம் 1500வருடங்களுக்கு முந்தையது என சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று சுமார் 350 வருடங்களுக்கு மேல் ஆகிறதாம்.
கோவிலில் திருவிழா முதலிய முக்கிய விஷஷேங்கள் நடந்து சுமார் 30 வருடங்களுக்கு மேல் ஆகிறதாம். இவ்வளவு பழமை வாய்ந்த கோவில் சிவனடியார்கள் மற்றும் தொண்டுள்ளம் படைத்த அன்பர்களால் நிச்சயம் கவனிக்கப்படவேண்டும்.
இது திருக்கோவிலின் வெளிப்பிரகாரச் சுற்று. இந்தக் கோவிலின் விஷேசம் என்னன்னா எல்லா கோவில்களிலும் உற்சவர் விக்ரகம், மூலவர் விக்ரகத்தில் இருந்து வேறுபட்டு இருக்கும். ஆனா, இந்த திருக்கோவிலில் மூலவர் விக்கிரகமும் உற்சவர் விக்கிரகமும் ஒரே மாதிரி இருப்பது ஒரு தனி சிறப்பு.
மேலும் இந்தத் திருக்கோவிலின் பிரதான தெய்வம் அம்பாள்தானாம். இந்த ஊரில் உள்ள பலபேருக்கு அரூபமாகவும், சிலருக்கு நேரிலும் காட்சி கொடுத்திருக்கிறதாம் இந்த அம்மன், இது மிகவும் சக்திவாய்ந்த அம்மனாம். 5 வருடங்களுக்கு முன்பு வரை 12 வயது பெண் ரூபத்தில் அன்பர்களுக்கு காட்சி கொடுத்திருகிறாளாம் இந்த ஸ்தலத்து அம்மன்.
மூலவர் சன்னதி போகும் வழியில் ஒரு பலிபீடமும். அதன் முன்னே கொடிமரமும். அதற்கு முன்னே நந்தியும் இருக்கிறது. இந்த ஸ்தலத்து சிறப்புகளில் ஒன்று கிழக்கில் இருந்து,
மலையில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி ஓடும் நம்பியாறு.
இது மூலிகை சத்து கொண்டது. இந்த நம்பியாற்றில் தினம் நீராடி இறைவனை தொழுது வந்ததால் சிலருக்கு குஷ்டரோகம் போன்ற வியாதிகளெல்லாம் குணமாகியிருக்கிறதாம்.
இது ஒரு பரிகார ஸ்தலம் ஆகும். குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி, சீரான செல்வ நிலை, அன்பு நிலைத்திருக்க விளக்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும், இங்கே பௌர்ணமி தோறும் நடத்தப்படும் விளக்கு பூஜையினால் திருமணத்தடை நீங்கும்.
புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. ஏன்னா, அங்கிருத்த ஒரு பெரியவர் சொன்னது இங்கே தொடர்ந்து விளக்கு பூஜையில் கலந்துக் கொண்ட
மூன்று பெண்களுக்கு திருமணத்தடை நீங்கி நல்லப்படியாக திருமணம் நடைபெற்றதாம். சிலருக்குத் தடைகள் நீங்கி புத்திரபாக்கியம் கிடைத்துள்ளதாம்.
நந்தி பீடத்திற்கு இடப்பாகத்தில் ஒரு மேடை போன்ற அமைப்பு இருக்கு. இது கல்யாண விழாக்களுக்கும், உற்சவர் அலங்காரத்துடன் வீற்றிருக்கவும் பயன்படுத்துகின்றனர்.
அதில் இருபக்கமும் யாழி சிற்பத்தின் கலைவண்ணத்தில் பார்க்க அழாகாக இருக்கும் இந்த மேடையும் இப்ப புனரமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆடிப்பூரம் அன்று அம்பாளுக்கு வளைகாப்பு சாத்தப்படுகிறது. நவராத்திரி விழாக்களும், சிவராத்திரி பூஜைகளும் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது.










