இப்புலோகத்தில் தைப்பூசத்தை விமர்சையாக கொண்டாடும் ஓரே வைணவ ஷேத்திரம் திருச்சேறை. ஏனெனில் சாரநாத பெருமாள் அவதார திருநட்சத்திரம் தைப்பூசம்
108 திவ்யதேசங்களுள் ஒன்று. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி திருச்சேறை.
மூலவர்: சாரநாதர்
தாயார்: சாரநாயகி
தீர்த்தம்: சார புஷ்கரணி
உற்சவர்: ஸ்ரீ சாரநாதப் பெருமாள்
விமானம்: சார விமானம்
தல வரலாறு
ஆதிசேஷன் குடையின் கீழ் தாயார் லட்சுமியுடன் பாற்கடலில் துயில் கொண்டிருந்த மகாவிஷ்ணு, பிரம்மதேவரை அழைத்து பிரளயகாலம் வருகிறது,
நீ உடன் பூலோகம் சென்று ஒரு புனித தலத்தில் மண் எடுத்து குடம் செய்து அதில் வேத ஆகம சாஸ்திர புராணங்களை ஆவாஹனம் செய் என கட்டளை இட்டார்.
பல ஆலயங்களில் மண் எடுத்து குடம் செய்தும் குடம் உடைந்தவன்னம் இருந்தது.
மகாவிஷ்ணுவை வேண்ட திருமால் பூலோக முக்கிய தலங்களுள் ஒன்றான திருச்சேறை சென்று தாரா தீர்த்ததில் நீராடி, மண் எடுத்து செய் எனக் கூறினார்.
பிரம்ம தேவரும் அவ்வாறே செய்து வேத ஆகமங்களை பாதுகாத்தார். பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்திலிருந்து மண்ணெடுத்து கடம் செய்து அதனுள் வைத்து வேதங்களைக் காப்பாற்றினார் என்பதும்,
காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நிளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார் என்பதும், மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இது என்பதும் இத்தலம் குறித்த மரபுவழி வரலாறுகளாகும்.
விஜயநகரப் பேரரசு ஆட்சியின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க அரசர், மன்னார்குடியில் இராஜகோபால சுவாமிக்கு ஒரு கோவில் அமைக்கத் தீர்மானித்து அதற்கான பொறுப்பைத் தன் அமைச்சரான நரச பூபாலனிடம் அளித்தார்.
பூபாலன் சாரநாதப் பெருமாளின் பக்தர். திருச்சேறையிலும் கோவில் அமைக்க விரும்பிய அமைச்சர்,
மன்னார்குடிக்குக் கருங்கற்களைக் கொண்டு செல்லும் ஒவ்வொரு பாரவண்டியிலிருந்தும் ஒரு கல்லை திருச்சேறையில் இறக்கிவிட்டுச் செல்லும்படி தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார்.
இச்செய்தியை அறிந்து சினமடைந்த அரசன் திருச்சேறைக்குச் சென்றான். அங்கு அரசனது கண்களுக்கு சாரநாதப் பெருமாள், இராஜகோபால சுவாமியாகக்
காட்சியளித்ததால் சினம் தீர்ந்த அரசன் இக்கோவிலையும் அமைப்பதற்கு மனம் உவந்தான் என்பதும் இத்தலம் குறித்த மரபு வரலாறு ஆகும்.
ஒரு முறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் பெருமாளை நோக்கித் தவம் இருந்தாள்.
இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார்.
பின் கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி தந்த பெருமாளிடம் காவிரி எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும் என வேண்ட பெருமாளும் அப்படியே செய்தார்.
மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.
இக்கோவிலின் மூலவர் சாரநாதன் நின்ற கோலத்தில் கிழக்குமுகமாக உள்ளார். இக்கோவிலில் மட்டுமே பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் காணப்படுகிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது.
இதனாலேயே இக்கோவிலின் மூலவர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். திருச்சாரம் என வழங்கப்பட்ட இத்தலம் “திருச்சேறை” ஆனது. மூலத்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயரும் இடதுபக்கம் காவிரித் தாயும் அமர்ந்துள்ளனர்.











