கடவுள் கணக்கு என்ன?
திருப்பூர் மாவட்டம் சிவன்மலையில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு
வைத்து பூஜிக்கப்படுகிறது. இதனால் பினாமி சொத்துக்கள் அதிக அளவில் பறிக்கப்படும் என்ற
பேச்சு பக்தர்களிடையே எழுந்துள்ளது.
சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. மலைமீது உள்ள இந்த
கோவில் சன்னிதானத்தில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேறு எந்தக்கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன்கோவிலில் ஆண்டவர் உத்தரவு என்ற பெயரில் கண்ணாடி பெட்டியில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புபூஜை செய்யப்படுவது வழக்கம்.
இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த கண்ணாடி பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை சற்று வித்தியாசமானது.
சிவன்மலை ஆண்டவர் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி கூறுவாராம்.
அதன்படியே சிவன்மலை ஆண்டவரிடம் பூ வைத்து உத்தரவு கேட்கப்படும். அவ்வாறு ஆண்டவர் உத்தரவு கிடைத்தவுடன் அந்தப்பொருள் கோவில் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்து தினசரி பூஜை செய்யப்படும்.

உத்தரவு பெட்டி
சிவன்மலை முருகன் பக்தரின் கனவில் வந்து, ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் தான், இது ஆண்டவர் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.
கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பணப்புழக்கம் அதிகரிப்பு கடந்த 2011 ஆம் ஆண்டு பக்தரின் கனவில் வந்து 500 ரூபாய் பணம் வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம்.
அதன் பின்பு மக்கள் மத்தியில் 10, 20, 50 ரூபாய்க்கு மதிப்பு குறைந்து போனது. ஏன் 100 ரூபாய்க்கு கூட மதிப்பு குறைந்து 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்தது.
பக்தர்களுக்கு உத்தரவு இங்கு மண், துப்பாக்கி, ஏர்கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை என 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஐதீகம்.
இதன் காரணமாக நாட்டில் ஏற்றமும் பெறலாம், இறக்கமும் பெறலாம் என்பதற்கான குறியீடாக இந்த கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருளை இப்பகுதி மக்கள் பக்தியுடன் தரிசித்து வருகிறார்கள்.
இரும்பு சங்கிலி 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கொங்கூர் சேர்ந்த கே.எம். சிவராம் என்பவரின் கனவில் இரும்பு சங்கிலி உத்தரவானது.
இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது.
வலம்புரி சங்கு இதனையடுத்து மஞ்சள், குங்குமம், ருத்ராச்சம் வைத்து பூஜிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி வலம்புரி சங்கு வைத்து வழிபட்ட நிலையில் நேற்று ஆண்டவர் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைத்து பூஜிக்கப்பட்டது.
இதனால் உள்நாட்டு சண்டை, அண்டைநாடுகளிடையே போர் ஏற்படலாம் என்று கூறப்பட்டது. அதேபோலவே சீனா நமது எல்லையில் வாலாட்டியது. பாகிஸ்தானும் நமது நாட்டுக்குள் வாலை நுழைத்து வாங்கிக் கட்டியது.
கண்ணாடியில் உருண்டை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில்,
பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். கடந்த ஆண்டு மே 3 முதல் நேற்று முன்தினம் வரை உலக உருண்டை வைக்கப்பட்டிருந்தது.
பினாமி சொத்துக்கள் மீட்பு இந்த நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மலர்விழி என்ற பெண் பக்தரின் கனவில் கணக்கு நோட்டு வைக்க உத்தரவாகி உள்ளது.
இதனையடுத்து கணக்கு நோட்டு வைத்து பூஜைக்கப்படுகிறது. இதனால் பினாமி சொத்துகள் மீட்கப்படும் என பக்தர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.











