ஸ்ரீ மௌனகுரு சாமி – தோற்றமும் வளர்ச்சியும்:
ஸ்ரீ மௌனகுரு சாமி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் மகான்
15. 3 .1897. அன்று ஈரோடு மாவட்டம் பவானிவட்டம் பாப்பாங்காடூர் என்ற கிராமத்தில்
அவதரித்தார்.
தந்தை பெயர் அப்பச்சி கவுண்டர்,தாயார் பெயர் மசிரியம்மாள் அந்துவ கோத்திரம், கொங்கு
வேளாளர் குலத்தை சேர்ந்த இவர். தாய் தந்தை சூட்டிய பெயர் காளியன்ன கவுண்டர்.
சிறுவயதிலிருந்தே இவர் தெய்வபக்தி மிக்கவராக விளங்கினார். பசுக்களை மேய்ப்பது இவரது
தொழிலாக இருந்தது. பசுக்களுக்கும் குழந்தைகளுக்கும் வைத்தியம் பார்ப்பார் மற்றும்
பசுக்களுடன் இவர் பேசுவார். பசுக்களும் இவர் சொல்வதை கேட்கும்.
தன் இளம் வயதில், இம்மகான் யாருடனும் அதிகம் பேசுவதில்லை யாரிடமும் பழகவும்
மாட்டார், எப்பொழுதும் எதோ சிந்தனை வயப்பட்ட வராகவே காணப்படுவார்.
பைத்தியக்காரனோ என்று நினைக்கும் அளவிற்கு தள்ளப்பட்டார். இவரதுபெற்றோர் இவருக்கு
திருமணம் செய்துவைத்தால் இவர் திருந்திவிடுவார் என நினைத்து,
மாராயான் என்னும் பெண்மணியை திருமணம் செய்து வைத்தார்கள்.
சில காலம் சம்சாரத்தில் ஈடுபட்டு ஒரு மகன், ஒரு மகள், பிறந்தனர். கொஞ்ச காலம் மட்டுமே
இவரது இல்லறவாழ்வு இருந்தது.
இவர் ஒருநாள் பசுக்களை மேய்த்து விட்டு ஆலயத்தில் தியானத்தில் அமர்ந்தார் தன்னை
மறந்தார் இறைவனை சரணாகதி அடைந்தார்.
“உடனே சிதம்பரம் கோயிலுக்கு செல்”
என அவர் காதில் அசரீரி ஒலித்தது. என்ன செய்கிறோம் என்று புரியாதஉணர்வில், பசுக்களை
அப்படியே விட்டுவிட்டு மனைவி மக்களைமறந்து புறப்பட்டுவிட்டார் சிதம்பரம் நோக்கி
துறவறம் ஆரம்பித்தது. நடந்தே சிதம்பரம் சென்றடைந்தார் திரு கோபுரங்களை தரிசித்தார்
எம்பெருமான் நினைவுகளில் மூழ்கி குளத்தில் குதித்தார்.
குளத்தின் நீரில் உடல் பட்டவுடன் அக்கினியில் பட்டது போல் உடல் முழுவதும் எரிவது போல்
உணர்ந்து, துடித்துக் கதறினார் சிவபெருமானை வேண்டி அழுதார். “மேல் ஆடைகளை
அணியாமல் வெளியே செல்”
என மீண்டும் ஒரு அசரீரி ஒலித்தது. என்ன ஒரு ஆச்சரியம் ஆடைகளை அகற்றியபின் தன்
உடலில் ஒரு ஜோதி பிரகாசிப்பது போன்ற மெய்மறந்தார்.
அவர், நிர்வாணமே சிறந்தது என முடிவெடுத்தார், அன்றிலிருந்து முற்றும் துறந்த நிலையில்
மாற்றிக்கொண்டு, மௌனம் மேற்கொண்டு மௌனத் துறவியாக மாறினார். இளம் வயதிலேயே
மௌன துறவியாக இவர் பல ஊர்களை சுற்றி உள்ளார்.
மனைவி மக்கள் பெற்றோர் எவ்வளவு மன்றாடியும் தன் குடும்ப வாழ்க்கையில் மீண்டும்
விருப்பம் காட்டாமல் வெளியேறினார். நிர்வாணமாகவே பல ஊர்களில் சுற்றித் திரிந்து
சென்னையை வந்தடைந்தா். சென்னையில் இவர் மீது கருணை கொண்ட காவல்துறையில்
பணிபுரியும் ஒரு அன்பர் இவரை வற்புறுத்தி கோவணம் மட்டுமாவது கட்டுங்கள் என வேண்ட
முதலில் மறுத்த இவர் பின்னர் ஒப்புக் கொண்டார்.
கோமணத்தை மட்டும் தரித்துக்கொண்டுவிட்டு சென்னையை விட்டு வெளியேறி பொன்னேரிக்கும், மீஞ்சூருக்கும் இடையே அடர்ந்த புதர் நிறைந்த ஏலியம்பேடூ என்ற கிராமத்தில் காணப்பட்ட ஒரு அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதியில் நிஷ்டையில் அமர்ந்து விட்டார்.
பல நாட்கள் உணவு தண்ணீர் என எதுவும் இல்லாமல் தொடர்ந்து தியானத்தில் அமர்ந்திருந்தார். இவருக்கு பாதுகாப்பாக இவரை சுற்றி பாம்புகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். இதனைக் கேள்விப்பட்ட ஈன்றபாளையம் என்ற ஊரில் வாழ்ந்த முனுசாமி, என்பவர் வந்து பார்த்துள்ளார்.
அப்பொழுது இவருக்கு மகானிடம் ஈர்ப்பு ஏற்பட்டு, இவர் மகனை தன் குருவாக ஏற்றார். அவர் காலடியில் விழுந்து, தன் சொந்த ஊரான ஈன்றபாளையத்தில், மகானின் பாதங்கள் பட வேண்டும் என வேண்டினார். மகானும் சம்மதித்து அவருடன் புறப்பட்டு ஈன்றபாளையம் வந்தடைந்தார்.
இங்கு பல ஆண்டுகள் தங்கியிருந்தார். வாழ்நாள் முழுவதும் இவர் மௌன விரதத்தை பின்பற்றியதால், மக்கள் ஸ்ரீ மௌனகுரு சாமி என்று அழைத்தனர். காய்ந்த செம்பட்டை முடி கருத்ததேகம் உடலில் ஆடை ஆபரணம் எதுவுமில்லை.ஒரு கோமணம் மட்டுமே,
தினமும் குளிப்பது இல்லை, எனினும் தூரத்தில் இவர் வரும்போதே, திருநீறு மணம் பரவும். அவர் உடலில் இருந்து வீசும் திருநீற்றின் மனம் மக்களை வியக்க வைக்கும் தெய்வீக மணம் கமழும்.தெய்வீக சிரிப்பை இவர் முகத்தில் எப்போதும் காணலாம்.
தெருவில் மெதுவாக நடந்து சென்று, கொண்டிருப்பார். யாராவது வீட்டிற்கு அழைத்தாள் மட்டுமே இவர் வீட்டிற்கு வருவார். தான்விரும்பி யாரிடமும் உணவு கேட்டது கிடையாது. நாம் விரும்பி உணவு ஏற்றுக் கொள்ளுங்கள் என மனம் உவந்து வேண்டினால், அவர் மனதிற்கு பட்டால் மட்டுமே, அவர் உணவை ஏற்றுக் கொள்வார்.மனதிற்கு பிடிக்கவில்லை எனில் வேண்டாம் என சைகையில் கூறிவிட்டு, புன்சிரிப்புடன் போய்க்கொண்டே இருப்பார்.
அவருக்கு உணவளித்து, உபசரிப்ப வர்களிடம், பலகை பல்பம் எடுத்து வரச்சொல்லி,அவர்கள் கேட்கும் பிரச்சனைக்கு தீர்வை எழுதிக் காட்டுவார். அவற்றைப் பின்பற்றி பலன் அடைந்தவர்கள் பலர். அவருக்காகவே பல வீடுகளில் பல்பம் பலகை இரண்டையும் தங்கள் வீடுகளில் வைத்திருப்பார்கள்.
ஓம் ஸ்ரீ மௌனகுரு சுவாமிகள் செய்த சில அற்புதங்கள் :
20 ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதி ஒருவருக்கு, இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கும் என ஆசி வழங்கினார், அதுபோன்றே அவருக்கு இரண்டு அழகான ஆண்குழந்தைகள் பிறந்தன. ஒரேநேரத்தில் வெவ்வேறு இடங்களில் காட்சி அளித்துள்ளார். பலருக்கு இவரின் வாக்குப்படி நல்ல வேலை கிடைத்துள்ளது.
இன்னும் பல அற்புதங்களை அவர் வாழும் காலத்தில் நிகழ்த்தியுள்ளார்.
பாலவாக்கம் தர்மா ரெட்டியின் மகள் திருமதி இரத்தினம்மாள் என்பவரின் வீட்டில் முன் நின்று கொண்டிருந்தார். சுவாமிகளைபார்த்த அம்மையார், பயபக்தியுடன் சுவாமியை வணங்கி ஆசி பெற்றார். சுவாமிகள் ஒரு பலகை பல்பம் எடுத்து வரச்சொல்லி, இவ்வாறாக எழுதினார்.
“நான் சில நாட்களே வாழ்வேன்” எனக்கு படுக்க ஒரு பெஞ்ச் கொடு. அதை வீட்டின் வெளியில் போடு. கூறை ஏதும் நிழலுக்காக போட வேண்டாம் என எழுதிக் கட்டளையிட்டார். அம்மையாரும் சுவாமிகள் கட்டளைப் படியே செய்து வந்தார்.
நாற்பதாவது நாள் காலை அம்மையாரிடம் மகான் அவர்கள் எனது ஆத்மா இன்று விளக்கேற்றும் வேளையில் பிரியும் எனவே தகுந்த ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள் என பலகையில் எழுதி காட்டினார்.
இந்த தகவல் அனைத்து ஊர்களில் பரவியது அன்பர்கள் பலர் திரண்டனர், அன்று மாலை எழுதி காட்டியது போலவே 24.05.1981 அன்று விளக்கேற்றும் வேலையான, மாலை 6.00 மணிக்கு, ஆத்மா பரமபதம் அடைந்தது. பஜனை கீர்த்தனைகள் பாடப்படும், சரண கோஷங்கள் முழங்க மகானின் பூத உடல், சித்தர்களை, அடக்கம் செய்யும் முறையில் ஜீவசமாதி செய்யப்பட்டது.
இவரது ஆலயத்தில் அமர்ந்து தியானம் பிரார்த்தனை செய்து பலன் அடைந்தவர்கள் பலர். நாமும் இந்த மகானின் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் பல நன்மைகளை அடையலாம். மாதம் தோறும் பௌர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
ஓம் ஸ்ரீ மௌனகுரு சுவாமிகள் ஜீவ சமாதி ஆலயம். இருக்கும் இடம்.
17 ரெட்டி தெரு, பஜார் வீதி, பாலவாக்கம்.
ஊத்துக்கோட்டை தாலுக்கா,
திருவள்ளூர் மாவட்டம். (வழி பெரியபாளையம்) – 602 026.
இந்த ஆலயத்தை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் 9444 573687.
நீங்கள் இந்த ஆலயத்திற்கு செல்லும் சமயம் ஆலயம் மூடி இருப்பின், மேலே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும், அன்புடனும் பாசத்துடனும் நம்மை உபசரித்து, ஆலயத்தை திறந்து காட்டுவார்கள்.
பெரியபாளையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில், ஒன்பது கிலோமீட்டர் தொலைவில், ஓம் ஸ்ரீ மௌனகுரு சுவாமிகள் ஜீவ சமாதி ஆலயம் ஆலயம் உள்ளது.











