பூலோகக் கயிலாயம் என்று ஓரு காலத்தில் அழைக்கப்பட்ட திருவொற்றியூர் ஓர் புண்ணிய பூமி என்பதற்கு இங்கு ஜீவசமாதி அடைந்திருக்கும் மகான்களும் சித்தர்களுமே சாட்சி.
அது மட்டுமன்றி திருவொற்றியூரில் வீற்றிருக்கும் அருள்மிகு தியாகராஜப் பெருமான் அப்பர் சுவாமிகளுக்காக ஆறாம் பவனி நடனம் ஆடியதற்காகவும்,
மீனவர் வடிவில் 63 நாயன் மார்களுக்குக் காட்சியளித்து அப்பர் சுவாமிகளுக்கு நைவேத்தியப் பிரசாதம் வழங்கியதற்காகவும் பெருமை பெற்ற ஸ்தலமாகும்.இங்குள்ள அப்பர் சுவாமி திருக்கோயிலில் அப்பர் பூசித்த மிகப் பழமையான சிவாலயம் உள்ளது.
வள்ளலார் இராமலிங்க அடிகளார் ஞானி பாம்பன் குமரகுரு சுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகள் என்று பல மகான்களும் தங்கியிருந்து யோக நிஷ்டைகள் செய்த பெருமை வாய்ந்தது இந்த ஆலயம்.
இந்த ஆலயத்தில் யோக நிஷ்டை செய்து ஞானம் பெற்ற சடைச்சாமிகள் இந்த ஆலயத்திற்கு அருகில் ஜீவ சமாதி அடைந்து இன்றும் ஒளிவடிவாக வீற்றிருக்கிறார்.
சடைச் சாமிகள் எப்போதும் தமது தலையிலுள்ள ஜடாமுடியில் ஓர் சிவலிங்கத்தை வைத்துக்கொண்டிருப்பாராம்.
அது மட்டுமன்றி ஒரு நடராஜர் சொரூபத்தை வழிபாடும் செய்வார் என்று கூறப்படுகிறது.நீண்ட தாடியுடனும் ஜடாமுடியுடனும் எப்போதும் காட்சியளித்ததால் இவர் சடைச்சாமி என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.
பல சித்துக்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தியுள்ள இவரைப் பற்றி வேறு செய்திகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
இவர் தாம் சமாதி அடையப் போகும் நாளை முன்னதாகவே அறிவித்து சமாதியைத் தயார் செய்துள்ளார்.
அவர் அறிவித்தபடி 1886-ம் ஆண்டு ஜனவரி 14-ம் நாள் (பார்த்திப ஆண்டு, தை மாதம், வியாழக்கிழமை, பரணி நட்சத்திரம்) சமாதியினுள் அமர்ந்து அதனை மூடச் செய்துள்ளார். சமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இவரிடம் தீட்சை பெற்றுச் சீடரான நைனா சுவாமிகள் என்ற மகான் பாம்பன் குமரகுரு சுவாமிகளின் குரு என்பது குறிப்பிடத்தக்கது. நைனா சுவாமிகளின் ஜீவசமாதியும் சடைச் சாமியின் ஜீவசமாதியின் அருகிலேயே உள்ளது.
திருவொற்றியூர் தேரடிப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அப்பர் சுவாமிகள் கோயில் தெருவினுள் நுழைந்து புறவழிச் சாலையைக் கடந்தால் வலது பக்கம் இந்த மண்டபம் உள்ளது.
Google Map Location –https://tinyurl.com/ybbg8e83










