பிரட் ப்ரூட் (Bread Fruit) – சீமைப்பலா
ஆங்கிலத்தில் பிரட் ப்ரூட் (Bread Fruit) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீமைப்பலா அல்லது ஈரப்பலா, பலா அயினி போன்ற பலாக்காய் காய்க்கும் இனத்தை சார்ந்த மரம் ஆகும்.
மொரேசியே (Moraceae) தாவரக் குடும்பத்தை சார்ந்த இது அர்டோகார்பஸ் இன்சிசா (Artocarpus incisa) என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது.
மலாயா மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரம்.

ஆயினும், இது வெப்ப பகுதிகளிலும் வேறு பல இடங்களிலும் பரவலாக இலை உதிரும் காடுகளிலும் உணவுக்காக வளர்க்கப்படுகின்றது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தாவரவியல் மாதிரியாக எச்எம்எஸ் பவுண்டி என்னும் கடற்படைக் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக்கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளிக் (William Bligh) என்பவர் மேற்கிந்தியத் தீவுகளில் இருந்த பிரித்தானியரின் அடிமைகளுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப்படுத்தினார்.
இம்மரம் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரம் வரை உள்ள மலைக்காடுகளில் குறிப்பாக மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் வளர்க்கப்படுகிறது.
இதன் பட்டை கடினமாகவும், கடும் சாம்பல் நிறத்திலும் தோற்றமளிக்கும் உள்தடி மஞ்சள் கலந்த பிரௌன் நிறத்தில் காணப்படும்.

மேல்தடி மிருதுவாகவும், வெள்ளை கலந்த பச்சை நிறத்திலும் காணப்படும்.
இதன் தடியில் பால் இருப்பதால் கரையான் போன்ற பூச்சிகள் அண்டாது.
இதன் காயை சமைத்து உண்ண மிகவும் சுவையாக இருக்கும்.
இதன் இலைகள் பச்சையாகவும் ஆமணக்கு இலையின் வடிவத்தில் பெரிதாக அயினி மர இலையைப் போல காணப்படும்.
இதன் பழம் மற்றும் தடியிலிருந்து பட்டை எடுத்து மஞ்சள் நிறத்திலுள்ள ஒரு வகை பால் சேகரித்து தொழிற்சாலைகளில் உபயோகப் படுத்துகிறார்கள்.
தடி உறுதியானதல்ல.
ஆகையால் முக்கியமாக காய்க்காக வளர்த்து வருகிறார்கள்.
காய்கறி கடைகளில் இதன் காய் கிடைக்கும்.
இறைச்சியுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம் மிகவும் சுவையாக இருக்கும்.
நல்ல சத்துக்கள் நிறைந்த இந்த காய் இலங்கை மக்களால் அதிகம் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.











