ஆனந்தம் கொண்டு வரும் ஆடி18ம்பெருக்கு.
அது ஏன்பதினெட்டு.?

பதினெட்டு என்ற எண் ‘ஜய’த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும்.
மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள்,
உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் காவிரி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள்.
அந்த ஆடிப் பதினெட்டு விழாவில் பெண்களே அதிக அளவில் பங்கு கொள்வார்கள். விழாவுக்குப் பத்து நாட்கள் முன்னதாகவே, ஒரு தட்டில் நவதானியங்களை தூவி, தண்ணீர் தெளித்து, சிறிதளவு மண்ணையோ அல்லது எருவையோ கலந்து மூடி வைப்பார்கள். விழாவுக்குள் அது முளைத்து, வெண்மையாக வளர்ந்து இருக்கும்.
இதை ‘முளைப்பாலிகை’ என்பார்கள் (முளைப்பாரி என்றும் சொல்வதுண்டு.) ஆடிப் பதினெட்டு தினத்தன்று பெண்கள் இந்த முளைப்பாலிகையைக் கையில் ஏந்தி, பிற்பகல் வேளையில் அணிவகுத்தபடி ஆற்றங்கரைக்குச் செல்வார்கள்.
அப்படிப் போகும்போது, வழியில் முக்கியமான இடங்களில் முளைப்பாலிகையைத் தங்கள் தலையிலிருந்து இறக்கி வைத்து, பெண்கள் வட்டமாக நின்று கும்மியடிப்பார்கல். இந்த ஊர்வலம் ஆற்றங்கரை போய்ச் சேர்வதற்கு ஏறத்தாழ மூன்று மணி நேரமாகும்.
ஆற்றங்கரையில் தூய்மையான ஓர் இடத்தில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்திருப்பார்கள். அவர் முன்னால், முளைப்பாலிகைத் தட்டுகள் வரிசையாக வைக்கப்படும்.
அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, சர்க்கரை போட்டுத் தண்ணீர் ஊற்றிக் கலந்து, அந்தப் பாத்திரங்களை பிள்ளையார் முன் அடுக்கி வைத்துப் பிரார்த்திப்பார்கள். சூடம் ஏற்றி வணங்குவார்கள்.
அப்போது பழுத்த சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்கள் எல்லோருக்கும் மஞ்சள் தடவிய நூல் கயிற்றைக் கொடுப்பார். அதைச் சிலர், கழுத்திலும் சிலர், கையிலும் கட்டிக் கொள்வார்கள்.
இதன் பிறகு பெண்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று கோலாட்டம், கும்மி என்று ஆடுவார்கள். இது முடிந்ததும், அவரவர் கொண்டுவந்த முளைப்பாலிகைத் தட்டுடன் ஆற்றில் இறங்குவார்கள்.
முளைப்பாலிகையைச் சிறிது சிறிதாக எடுத்து ஆற்றில் விடுவார்கள். வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தாலான பனை ஓலைகளைச் சிறிய வட்டமாகச் சுற்றிச் செய்யப்பட்ட காதோலையையும், சிறிய கறுப்பு மணிகளாலான கருகமணியையும் ஆற்றில் விடுவார்கள்.
‘பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிவரும் காவிரி அன்னையின் வரவால் பயிர், பச்சைகளெல்லாம் முளைவிட்டுத் தழைக்கப் போகின்றன. இப்போது அவள் மசக்கையாக இருக்கிறாள்!’ என்ற ஐதீகத்தில்தான் இவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன.











