“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு” எத்தனைக் கெட்டவனாக இருந்தாலும் அவனும் ஒரு நாள் இறந்துவிடுகிறான். எத்தனை நல்லவனாக இருந்தாலும் அவனும் ஒரு நாள் இறந்துவிடுகிறான்.
இந்த விஷயத்தை லகுவாக கண்ணதாசன் ஒரு கவிதையில் பாடுவார்.காமுகனும் மாண்டான் – கடவுள் நெறி பேசும் மாமுனியும் மாண்டான் – என்றார்.
நல்லவன் இல்லாத பொழுதுதான் கெட்டவனால் ஏற்படும் இன்னல்களைப் புரிந்துகொள்ளுகின்றோம். கெட்டவன் இல்லையேல் நல்லவன் இருந்தாலும் அவன் அருமை யைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். நல்லவரின் அருமையைப் புரிய வைக்க கெட்டவன் வேண்டும்.
இரவும் பகலும், தீயும் நீரும், நன்மையும் தீமையும், கலந்துதான் இருக்கின்றன. வெறும் இனிப்பு மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அதுவும் ஒரு நாள் அலுத்து விடும்.வெறும் கசப்பு மட்டும் சாப்பிட்டுக் கொண் டிருந்தால் இனிப்பின் இனிமை புரியாமல் போய்விடும்.
ஒன்றைப் புரிந்து கொள்வதற்கு மற்றொன்று வேண்டும். அதைவிட முக்கியம் ஒன்றில் தான் இன்னொன்றும் மறைந்து இருக்கிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறோம். நஞ்சு அமிர்தத்தில்தானே இருந்தது. நஞ்சு மறைமுகமாக இருக்கிறது. அதனால் தான் பாற்கடல் கடைந்த போது அமுதமும் நஞ்சும் இரண்டும் ஒரே இடத்தில் இருந்து பிறந்தன. ஒரு விஷயம் அளவுக்கு மீறிப் போகும் பொழுது அதுவே தீமை ஆகிவிடுகிறது.
இத்தனையும் புரிந்து கொள்ள மரணத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவருடைய வாழ்வு என்பது ஜனனம் மரணம் என்ற இரண்டு புள்ளிகளுக்கு இடையே நிகழ்வது.
வாழ்வு என்பது வேறொன்றும் இல்லை காலம் (TIME) தான். இறந்துபோன ஒருவருடைய படத்தைப் போட்டு தோற்றம் – மறைவு என்று இரண்டு தேதிகளைக் கொடுத்திருப்பார்கள்.
உதாரணமாக 1950ஆம் ஆண்டு ஒருவர் பிறந்து 2020-ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டார் என்று இருந்தால், 1950 க்கும் 2020 க்கும் இடைப்பட்ட காலம்தான் அவர் வாழ்வு. அதனால்தான் அவருடைய இறப்பை, காலமாகி விட்டார் (PASSED) என்று குறிப்பிட்டார்கள்.
உயிர்களைக் கொண்டு போகும் எமதர்மனை காலன் என்ற சொல்லால் குறிப்பிட்டார்கள். காலத்தை கவனிக்காமல் வாழ்ந்தால், காலன் கவனித்து விடுவான். அப்படியானால் வாழும் காலத்தை வகையாக அமைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நொடியும் அடுத்த நொடி நமது இல்லை என்ற நினைவோடு வாழுங்கள் என்றார்கள்.
இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று என்று வருமோ அறியேன் என் கோவே – துன்று மலவெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம். – என்பார் வள்ளலார்.
இன்னும் அழகாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஜனனம் (பிறப்பு) என்பது உயிர், ஒரு கூட்டைத் தேடுவது. மரணம் என்பது, உயிர் கூட்டை விட்டு வெளியேறுவது.
பறவைகளாக இருக்கலாம் விலங்குகளாக இருக்கலாம் மனிதர்களாக இருக்கலாம். எல்லா உயிர்க்கும் இது பொருந்தும். உயிரில் மாற்றமில்லை. புகுந்த கூட்டில் தான் மாற்றம்.
கூட்டில் சற்று தங்கி இளைப்பாறும் உயிரானது, கூடு வெறுத்தாலும், உபயோகம் இல்லை என்று நினைத்தாலும், அல்லது அந்த கூட்டிற்கு (உடலுக்கு) உயிரை வைத்துக்கொள்ளுகின்ற சக்தி வெளியேறிவிடுகிறது.
உயிர் உள்ளே நுழைவதை (IN) ஜனனம் என்றும், உயிர் வெளியேறுவதை (OUT) மரணம் என்றும் சொன்னார்கள்.
உயிரானது நிரந்தரமானது. அது உள்ளே போகிறது; வெளியேறுகிறது.மறுபடி உள்ளே போகிறது; வெளியேறுகிறது.
“புனரபி ஜனனம் புனரபி மரணம்” என்று ஆதிசங்கரர் பஜ கோவிந்தத்தில் இதைப் பக்குவமாய் பாடி வைத்தார். வீடுவீடாகப் போவது போல, உயிர் கூடு கூடாகப் புகுந்து வெளியேறுகிறது.
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாயடி யேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய் வேன் கச்சி ஏகம்பனே
– என்று பாடினார் பட்டினத்தடிகள்.
இன்று வருமோ? நாளை வருமோ? அல்லது மற்று என்று வருமோ?துன்று மல வெம்மாயை அற்று, வெளிக்குள் வெளிகடந்து,சும்மா இருக்கும் சுகம்”பாடலின் பொருள்இறைவா! முக்தி தரும் அந்தப் பேரின்ப நிலை (சும்மா இருக்கும் சுகம்) இன்று கிடைக்குமா, நாளை கிடைக்குமா அல்லது எந்த நாளில் கிடைக்குமோ எனக்குத் தெரியவில்லை. எனது அறியாமையும் ஆணவமும் விலகி, பரம்பொருளை உணர்ந்து, மாயையிலிருந்து விடுபட்டு சும்மா இருக்கும் அந்த ஆனந்த நிலை எப்போது எனக்குக் கிட்டுமோ?
இதேபோன்று சாவை மையமாக வைத்துப் பாடிய ‘சும்மா இருக்கும் சுகம்’
என்ற தத்துவப் பாடலை பத்திரகிரியார் மற்றும் தாயுமானவர் போன்றோரும் பாடியுள்ளனர்.
குறிப்பிட்டுள்ள ‘காஞ்சி’ என்ற வார்த்தை, காஞ்சிபுரத்தில் அருளும் ஏகாம்பரநாதரைக் (கச்சியேகம்பன்) குறிக்கும் சொல்லாகச் சித்தர் பாடல்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது).
நன்றிங்க ஐயா சிவாய நம











