நவக்கிரகங்கள் அருளாசி புரியும் தலங்கள்
ஜோதிட சாஸ்திரம் மற்றும் கோள்களின் நிலைப்பாடு, அவற்றின் தாக்கம் ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கான பரிகாரங்கள் செய்ய தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன.

நவ என்றால் ஒன்பது என்றும், கிரகம் என்றால் கோள் என்றும் பொருள்படும். நவகிரகம் என்று அழைக்கப்படும் ஒன்பது கோள்களைக் குறிக்கும் தெய்வங்களுக்கான கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 60 கி.மீ. சுற்றளவில் உள்ளது.
1. சூரியன் – சூரியனார் கோவில்
இக்கோவிலில் குடிகொண்டுள்ள சூரியனாரை தரிசித்தால் ஆரோக்கியம், வெற்றி, வாழ்வில் செழுமை ஆகியவற்றைப் பெறலாம்.
2. சந்திரன் – திங்களூர் கோவில்
சந்திர கடவுளுக்காக அமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு சென்று வருவதால் நீண்ட ஆயுளும் சுகமான வாழ்வும் கிடைக்கப் பெறுவர். மன பயம், மன நோய்கள் கூட அகலும் சந்திர பகவான் துன்பங்களையும், துயர்களையும் துடைக்க வல்லவர்.
3. செவ்வாய் – வைதீஸ்வரன் கோவில்
இங்கு சென்று இறைவனை வணங்குபவருக்கு தைரியம், வெற்றி, பலம் ஆகியவற்றைப் பெறலாம். தைரியம் ஏற்படும் என்பதால் பயந்த சுபாவம் கொண்டவர்கள் அவசியம் சென்று வழிபட வேண்டிய தலம்.
4. புதன் – திருவெண்காடு
புதனின் அருள்பார்வையில் அறிவும், புத்தி சாதுர்யமும் கிட்டும். கல்வியில் மேன்மை ஏற்பட, கணிதத்தில் வல்லமை பெற. வியாபாரம் பெருக இந்தத் தலத்து இறைவனை வழிபடலாம்.
5. குரு – ஆலங்குடி
இங்கு தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். 12 ராசிகளுக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடையும் பொழுது இத்தலத்தில் சிறப்புப் பூசைகள் நடைபெறும். தனுசு, மீனம் ராசிக் காரர்கள் ஒரு முறையாவது சென்று வருவது நலம்.
6. சுக்கிரன் – கஞ்சனூர்
சிவன் பார்வதி திருமணக் காட்சியை பிரம்மா இத்தலத்திலிருந்து கண்டார். கணவன் மார்கள் தங்கள் மனைவியரின் நல்வாழ்விற்காக இங்கு வந்து தரிசனம் செய்யலாம். திருமணம் ஆகாதவர்கள், இல்லற வாழ்வில் சிக்கல் இருப்பவர்கள் கூட இங்கு வந்து இறைவனை வழிபடலாம்.
7. சனி – திருநள்ளாறு
12 ராசிகளுக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சி செய்யும் போது சிறப்புப் பூசைகள் நடைபெறும். இங்குள்ள நளதீர்த்தத்தில் குளிப்பதால் தீமைகள் விலகிவிடும் என்று நம்பப்படுகிறது. சனி ஜாதகத்தில் கோச்சாரப்படி நல்ல நிலையில் இல்லை என்றால் இந்தத் திருத்தலத்துக்கு வந்து வழிபடலாம்.
8. கேது – கீழ்பெரும்பள்ளம்
ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள். கேது லக்னம்,2, 7,8 ஆகிய இடங்களில் அமையப்பெற்றால் அவசியம் இந்தத் திருத்தலத்து வந்து வழிபடுவது நல்லது.
9. ராகு – திருநாகேஸ்வரம்
ஆதிசேஷன், தக்ஷ்ன், கார்கோடகன் எனும் சர்ப்பங்கள் (பாம்புகள்) சிவபெருமானை வழிபட்ட தலம். இங்கு வந்த ஈசனை வழிபட நாக தோஷம் தீரும். தோல் வியாதிகள் அகலும்.











