வடபழனி சித்தர்கள் – அண்ணாசாமி தம்பிரான்
தென்பழநியில் ஆட்சி செலுத்திய முருகப் பெருமான் வடபழனியிலும் கோலோச்ச விரும்பியது, சில நூறு ஆண்டுகளுக்கு முன்,
போகரும் புலிப்பாணியும் தொடங்கிய தென்பழநித் திருப்பணியை, வடபழனியில் தொடர்வதற்கு முருகப் பெருமான் தேர்ந்தெடுத்து மூன்று மாபெரும் சித்த புருஷர்களை.
அவர்கள்-அண்ணாசாமி ,ரத்தினசாமி ,பாக்கியலிங்க தம்பிரான் போன்றோர் ஆவர். இந்த மூன்று சித்புருஷர்களின் முயற்சியால்தான் வடபழனி ஆண்டவர் ஆலயமே உருவானது; புகழ்பெற்றது.
அண்ணாசாமிதம்பிரான்:வடபழனிக்கு அருகே சாலிகிராமத்தில் பிறந்தவர் அண்ணாசாமி நாயக்கர். பாலகனாய் இருந்தபோது படிக்கப் போன இடத்தில் பாடம் மனதில் பதியவில்லை, பக்தி வேரூன்றியது.
கோடம்பாக்கத்தில் இருக்கும் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் கோயிலுக்கு மாலைப் பொழுதில் சென்று விடுவார். நாட்கள் ஓடின. இல்லறம் அழைத்தது. பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் நடந்தேறியது.
இனிய இல்லறம் இரு மகவை ஈன்றெடுத்துத் தந்தது.இந்த நேரத்தில்தான் அண்ணாசாமி பெரும் நோயால் பாதிக்கப்பட்டார்.
தீராத வயிற்று வலி திடீரென அவரைத் தொற்றிக்கொண்டது. கைவைத்தியம் பலன் தர வில்லை, தேர்ந்த மருத்துவர்களின் முயற்சியும் தோற்றுப்போனது, படாத பாடு பட்டார் அண்ணாசாமி நாயக்கர். தான் வணங்கும் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரரிடமே உபாதை தீர வேண்டினார்.
இதைத்தீர்க்கும் மாபெரும் பொறுப்பைத்தகப்பன் ஆனவன். தனயனிடமே விட்டுவிட்டான் போலிருக்கிறது, முருகப் பெருமான். அண்ணாசாமி நாயக்கரை ஆட்கொண்ட விதம் இப்படிதான்.
ஒரு நாள் மாலை வேளையில் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தை அண்ணாசாமி வலம் வந்து கொண்டிருந்தபோது. வயிற்று வலி திடீரென அதிகரித்தது. ஓ வென்ற அலறலுடன் பிராகாரத்திலேயே துவண்டு சரிந்தார்.
தென்பழநியில் இருந்து பாதாயாத்திரையாக வந்த ஒரு துறவி, துவண்டு விழுந்த அண்ணாசாமியைக் கண்டார்.
அகத்தில் அருளும் முகத்தில் பொலிவுமாகக் காணப்பட்ட அந்தத் துறவி, அண்ணாசாமியின் அருகே சென்று அவரது வயிற்றில் பழநி ஆண்டவரின் திருநீறை மருந்தாகத் தடவினார்.
துவண்ட நிலையில் இருந்தவர். கண்களைத் திறந்து பார்த்தார். துறவி புன்னகைத்தார். தன் பிரச்சனையைத் தெரிவித்தார் அண்ணாசாமி.
அப்பனே கலியுகத்தில் மருத்துவக் கடவுளாக விளங்கும் பழநிக்குச் செல். தண்ட பாணியிடம் தண்டனிட்டு உன் குறை சொல். அவனே உன் குறை தீர்க்க வல்லான் என்றார்.
அண்ணாசாமிக்கு அழாத குறை. பின்னே…. அந்த காலத்தில் – அதுவும் இத்தகைய ஒரு நோயோடு ஒருவர் பழநிக்குச் சென்று திரும்புவது என்பது சாமான்யமா?
எனவே, துறவியே…. இந்த வயிற்று வலியையும் உடன் வைத்துக் கொண்டு பழநிக்கு என்னால் செல்ல இயலாது. வேறு உபாயம் கூறுங்கள் என்றார்.
சரி மூன்று கிருத்திகை தினங்களில் தொடர்ந்து திருப்போரூர் சென்று முருகனை வழிபடு. நான்காவது கிருத்திகை தினத்தன்று திருத்தணிகை சென்று வா. மறவாமல், திருத்தணிகையில் உயர்ந்தோர் காணிக்கை செலுத்து என்று அருளிச் சென்று விட்டார்.
துறவி சொன்னபடி, கடும் வயிற்று வலிக்கு இடையிலும் திருப்போரூருக்கு நடைப்பயணமாகவும் படகிலும் சென்றார் அண்ணாசாமி. தவிர, ஒரு முறை கடும் மழையின் காரணமாக படகுப் போக்குவரத்து இல்லாமல் ஆற்றில் நீந்தியும் சென்று முருகனை வழிபட்டார்.
மூன்றாவது முறை முருகனை வழிபட்டுத் திரும்பும்போது அசதியின் காரணமாகவும் மிகுதியான மழையின் காரணமாகவும் திருப்போரூருக்கு அருகே கண்ணாப்பேட்டையில் சிதம்பரம் சுவாமிகளின் சந்நிதியின் அருகே சற்று கண்ணயர்ந்தார்.
அப்போது ஒரு கனவு ஒரு பெரியவர் தோன்றி, ஏனப்பா மழையிலும் புயலிலும் முருகனைத் தேடி வருகிறாயே நீ இருக்கும் இடத்திலும் அவன் இருக்கிறானே அங்கேயே அவனை வழிபடலாமே? என்று சொல்லி மறைந்தார்.
முருகனே தனக்கு இட்ட உத்தரவாக இதைக் கருதி, சென்னையில் தான் இருக்கும் இடத்தை விட்டு அகலாமல், தினமும் முருகனை வழிபடலானார்.
இந்த நேரத்தில் நான்காவது கிருத்திகை தினமும் நெருங்கியது.
அப்போதுதான் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் கோயில் பிராகாரத்தில் பாத யாத்திரையாக வந்து தனக்கு அருளிய துறவி நினைவுக்கு வந்தார். ஆஹா நான்காவது கிருத்திகை தினத்தின்போது திருத்தணிகை சென்று உயர்ந்ததோர் காணிக்கை செலுத்து என்று எனக்குச் சொன்னாரே என்று தெளிந்து பரவசமானார்,
அண்ணாசாமி.துறவியின் திருவாக்குபடி திருத்தணிகை புறப்பட்டு அடைந்தார். அண்ணாசாமி திரளான பக்தர்களின் இடையே மால்முருகனை வணங்கினார்.
அவரது கண்களில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்தது, என் துயர் தீர்க்கும் அப்பனே… வயிற்று வலியை வாங்கிக் கொள்ளப்பா என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.
அடுத்து காணிக்கை செலுத்த வேண்டுமே! உண்டியல் அருகே சென்றார். காணிக்கை அளிக்கக் கையில் காசு-பொருள் ஏதும் இல்லை. எதைச் செலுத்தவது? சட்டென்று உயர்ந்ததோர் காணிக்கை அவர் நினைவுக்கு வந்தது. உன் திருப்புகழைப் பாடத் தெரியாத என் நாக்கையே அறுத்து உனக்குக் காணிக்கையாகச் செலுத்துகிறேன்.
என்று பித்துப் பிடித்தவர் போல் அலறி கையில் இருந்த சிறு கத்தியின் உதவியால், நாக்கை முழுவதுமாகத் துண்டித்து உண்டயலில் இட்டார் (பலிபீடத்தின் அருகே ஓர் இலையில் வைத்துக் காணிக்கை செலுத்தினார் என்று சொல்வர்).
வாயில் இருந்து வரும் ரத்தத்தையும் வந்திருக்கும் பக்தர்களின் பரவசத்தையும் அண்ணாசாமி சட்டை செய்யவில்லை.
முருகா….. முருகா… என்று குழறியபடியே. கொடிமரத்தின் அருகே வேரறுந்த மரம் போல் வீழ்ந்தார். அடுத்த கணமே அதுவரை அவரைப் பீடித்திருந்த வயிற்று வலி மாயமாக மறைந்து போயிற்று.
இதுதான் முருகனின் திருவருளோ! துறவி சொன்ன திருவாக்கின் மகிமை எண்ணி, மகிழ்வான மனதுடன் சென்னை திரும்பினார். தான் இருக்கும் இடத்திலேயே முருகப் பெருமானின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட ஆரம்பித்தார்.
விரைவிலேயே அவரது நாக்கும் மெள்ள மெள்ள வளர்ந்து. பழைய நிலையை அடைந்தார்.முருகனின் பாடல்களைத் திறம்படக் கற்றார். சிறு வயதில், புத்தியில் ஏறாத அந்த அரும் பாக்கள். முருகனின் அருளால், வெகு விரைவிலேயே இவருக்கு வசமாயின.
அண்ணாசாமியின் புகழ் திக்கெட்டும் பரவியது. முருகப் பெருமானின் அருள் பெற்றவர் இவர் என்று பல பக்தர்களும் இவரைத் தேடி வந்தனர். இவர் சொல்லும் வாக்கு பலிக்க ஆரம்பித்தது.
குறி சொல்வதற்கென்று ஒரு மேடை அமைத்து. அங்கே முருகனின் படத்தை வைத்து வழிபட்டார். (இன்றை வடபழனி முருகன் ஆலயம் இருக்கும் இடம் இதுதான்). சாதாரணமாக இருந்த அண்ணாசாமி அண்ணாசாமி தம்பிரான் ஆனார்.
பழநிக்குச் செல்ல ஒரு நேர்த்திக் கடன் இருக்கிறதே என்று ஒரு கட்டத்தில் உணர்ந்த அண்ணாசாமி தம்பிரான், பாத யாத்திரையாகப் புறப்பட்டார். மலை மேல் அருளும் தண்டாயுதபாணி தெய்வத்தை வணங்கினார். கிரிவலம் வந்து தொழுதார்.
வலம் முடிந்து அடிவாரம் வந்ததும். ஒரு படக் கடையில் பழநி ஆண்டவரின் அற்புதக் கோலத்தைக் கண்டார். அந்தப் படத்தைத் தான் வாங்க வேண்டும் என்று அவரது உள்ளுணர்வு சொன்னது. ஆனால் அதை வாங்குவதற்கு அவரிடம் காசு இல்லை.
கேட்டுப் பார்த்தார் கடைக்காரரிடம் காசு இல்லாமல் கலிகாலத்தில் யாராவது பொருள் தருவார்களா? தம்பிரானைக் கடைக்காரர் துரத்தி அனுப்பிவிட்டார்.
அந்தத் திருவடிவ நினைப்பிலேயே சோகமயமாக வந்தவர், இருள்வேளையில் ஒரு நெல்லி மரத்தடியில் தூங்கிப் போனார். பொழுது புலர்ந்தது, முருகனின் திருவுருவப் படத்தை வாங்கக் கூட எனக்கு வக்கில்லையே என்று கவலையில் கண்ணீரும் கம்பலையுமாக இரவில் படுத்ததால்.
அவரது முகம் ஏகத்துக்கும் வீங்கிப் போயிருந்தது. கதிரவன் கதிர்களின் சூடு தன் மேல் பட்டத்தும் திடுக்கிட்டு வழித்தார். எழுந்து உட்கார்ந்தார். கண்ணெதிரே. ஆச்சரியம்.
தம்பிரானால் நம்ப முடியவில்லை. முந்தைய தினம் இரவு. எந்தப் படத்தைக் காசு இல்லாமல் ஒரு கடைக்காரரிடம் கேட்டாரோ.
அந்தக் கடைக்காரர் இவருக்கு அருகே, அதே படத்துடன் பவ்யமாக அமர்ந்திருந்தார். தம்பிரான் பேச ஆரம்பிப்பதற்கு முன் கடைக்காரரே முந்திக்கொண்டு, சாமீ…. நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது, நேத்து ராத்திரி மலை மேல் உள்ள ஆண்டவர் என் கனவில் வந்து உங்ககிட்ட இந்தப் படத்தை கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டார்.
#Delhi to #Muscat Daily Special Offer..! www.aurobookings.com
197 Countries of the World ALL FLIGHT TICKTS EASY ONLINE BOOKING–✈
Search for cheap airline tickets
நீங்க காசு எதுவும் தர வேண்டாம். இதை வாங்கிக்கிட்டாதான் நான் வியாபாரத்துக்கப் போக முடியும் என்றான் பவ்யமாக.
பழநிப் பெருமானின் திருவிளையாடலை நினைத்து வியந்த தம்பிரான் அதைப் பெற்றுக் கொண்டார். கிடைத்தற்கரிய பொக்கிஷம் தன்னைத் தேடி வந்தது போல் அதைச் சுமந்து கொண்டு சென்னை திரும்பினார்.
தான் குறி சொல்லும் கோடம்பாக்கம் மேடையில் ஒரு குடிசை போட்டு அதனுள் இந்தப் படத்தை வைத்தார். தென்பழநியில் இருந்து வந்த நீ.
இன்று முதல் வடபழனி ஆண்டவர் என்று அழைக்கப்படுவாய் என்று மன முருகிப் பரவசப்பட்டார். வடபழனி ஆண்டவரின் படத்துக்குத் தினமும் புஷ்பங்கள் சார்த்தி, முருகனின் புகழ் பாடி அர்ச்சித்தார். கோடம்பாக்கத்தில் (பின்னாளில் வடபழனி) பழநி ஆண்டவர் முதன் முதலாகக் குடிகொண்ட கதை இதுதான்.
இந்த இடத்தில்தான் பின்னாளில் கோயில் எழும்பியது (இன்றைக்கும் வடபழனி கோயிலில் ஆதிசித்தர் பீடத்தில் இந்தப் படம் பூஜிக்கப்படுவதைத் தரிசிக்கலாம்).











