நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில், தமிழகத்தின் மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் .ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள நரசிங்கம் எனும் இடத்தில் அமைந்த தொன்மையான குடைவரைக் கோவில்.
கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இக்கோயிலின் மூலவராக யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அமர்ந்துள்ளனர். கோயிலில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் சன்னதி தனியாக உள்ளது. யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது இது, நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயிலாகும்.
உரோமச முனிவர், தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி, இந்த யானை மலை தலத்திற்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். மேலும் நரசிம்மரை, அவரது நரசிம்ம அவதார கோலத்திலேயே தரிசிக்கவும் விரும்பினார்.
இறைவனும் உரோமச முனிவரின் விருப்பப்படியே, உக்கிர நரசிம்மராக தோன்றி காட்சி தந்தார். ஆனால் நரசிம்மரின் உக்கிர கோல வெப்பத்தால் உலகமே தகித்தது. இதனை தாங்கிட முடியாமல், தேவர் களும், முனிவர்களும் பிரகலாதனிடம் சென்று முறையிட்டனர். பிரகலாதனும் இத்தலத்திற்கு வந்தார். ஆனால் நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர, வெப்பம் முற்றிலும் நீங்கவில்லை.
இதையடுத்து அன்னை மகாலட்சுமியிடம் அனைவரும் முறையிட்டனர். மகாலட்சுமியும் இத்தலத்திற்கு வந்தார். அதன்பிறகே நரசிம்மரின் உக்கிரம் முழுமையாக மாறி தணிந்தது. மேலும் அன்னை மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்தபடி, யோக நரசிம்மராக, கேட்டதை வழங்கும் வள்ளலாக இத்தலத்தில் நரசிம்மர் அருள்புரிகிறார்.











