பரமாத்மா சஞ்சரிக்கும் புனித நேரங்கள் சில உண்டு – ஸ்ரீஅரவிந்தர்
மானிடரிடையே பரமாத்மா சஞ்சரிக்கும் புனித நேரங்கள் சில உண்டு. ஈசனின் சுவாசம் நமது ஜீவ வெள்ளத்தின் மேல் பரவிப்படியும் நேரங்கள் பல உண்டு. அந்த தெய்வம் பின்வாங்கி விடும் மற்ற நேரங்களும் உண்டு.
அச்சமயம் மக்கள் தங்களுடைய சொந்த அகங்காரத்தின் பலத்தினாலோ அல்லது பலவீனத்தினாலோ செயலாற்றிக் கொள்ளட்டும் என்று அது விட்டு விடுவதும் உண்டு. முன் சொன்ன நேரத்தில் சிறிதளவு முயற்சியும் கூட மகத்தான பலன்களைக் கொடுக்கும்.
விதியையே மாற்றி விடும். இரண்டாவதிலோ அந்தக் காலகட்டத்தில் சிறிதளவு பயன்பெறுவதற்கும் கடும் உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தப்பிந்தையது முந்தையதை அடைவதற்கான ஏற்பாட்டைச் செய்யக்கூடும் என்பது உண்மையே.
வேள்வியின் மெல்லிய புகைச்சுருள் விண்ணை அடைந்து கடவுளின் அருட்கொடையாம் மழையைக் கொண்டு வரவும் கூடும்.
தெய்வ முகூர்த்தம் நெருங்கிவரும் நேரத்தில், அதைப்பயன் படுத்திக் கொள்ளச் சித்தமாக இல்லாமலோ அல்லது உறங்கிக் கொண்டோ இருக்கும் மனிதனோ அல்லது நாடோ மகிழ்ச்சியைக் காணாது.
ஏனெனில், அங்கே அந்த தெய்வத்தை வரவேற்பதற்கு விளக்கு நன்கு தூண்டிவிடப்பட்டிருக்காது. தெய்வக் குரலைசக் கேளாத வண்ணம் செவிகள் அடைபட்டிருக்கும்.
ஆனால் நல்ல வலிமையோடும் சித்தமாகவும் இருந்து கொண்டு அந்த தெய்வ சக்தியை வீணாக்குபவர்களை,அதனை தவறாகப் பயன்படுத்துபவர்களை என்னவென்பது! அவர்கள் கதி அதோகதிதான். அவர்களுக்கு இது ஈடு செய்ய வொன்னாத பெரு நஷ்டம், பேரழிவு ஆகும்.
அந்த தெய்வ முகூர்த்தத்தில் உனது ஆன்மாவைத் தூண்மையாக்கு; தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளுதல், பொய் வேஷம்,வீணான தற்புகழ்ச்சி ஆகியவற்றைத் துடைத்து உன் ஆன்மாவைத் தூய்மையாக்கு, அப்போதுதான் உன்னால் நேரிடையாக உனது அந்தராத்மாவைக் காண இயலும்.











