பெரிய இரகசியம்
ஓரு குரு அடிக்கடி திருட்டுகள் செய்யும் பழக்கம் மேற்கொண்டிருந்தார்.
ஓரு ஞானி இப்படிச் செய்வது பலருக்கு வியப்பாக இருந்தது மற்றவர்களுக்கு சொந்தமான சிறு பொருட்களைத் திருடுவதும், சிறைக்குப் போவதுமே அவர் வாழ்க்கை போல அமைந்து விட்டது.
அவரது மாணவர்களுக்கு அது புதிராக இருந்தது. தங்கள் குரு ஏன் அப்படிச் செய்கிறார். என்பது அவருக்கு விளங்கவில்லை.
பொறுமை இழந்த சீடர்கள் ஒரு நாள் அவரிடமே கேட்டார்கள்.
ஏன் சுவாமி இப்படிச் செய்கிறீர்கள். செருப்பைக் கூடத் திருட வேண்டுமா நீங்கள் உங்களுக்குத் தேவையானதை எங்களிடம்
சொன்னால் கொண்டு வந்து குவித்துவிட மாட்டோமா? ஏன் என்ன ஆயிற்று உங்களுக்குக்கு..
அவர் சிரித்தார்.பிறகு பேசாமல் போய்விட்டார். பிறகு அதுவே அவர் வழக்கமாயிற்று. திருடுவதும் அகப்பட்டுக் கொள்வதும் சிறைக்குச் செல்வதும் சீடர்கள் கேட்டால் சிரித்துவிட்டு நகர்ந்து விடுவதும்.
கடைசியில் ஒருநாள் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார். அவரைச் சூழ்ந்து நின்ற சீடர்கள் அப்போதாவது உண்மை சொல்லமாட்டாரா என்று பழைய கேள்வியைத் திரும்ப கேட்டார்கள்.
இப்போது சொல்லுங்கள் குருவே உங்கள் செயலின் மர்மம் என்ன
அதற்கு குரு சொன்ன பதில் இதுதான் சொல்லுவதற்கு இதில் பெரிய இரகசியம் என்ன இருக்கிறது?
ரொம்ப சாதாரணமான விஷயம் அது நான் அடிக்கடி சிறைக்குள் போக விரும்பினேன்.
அதனால்தான் திருடினேன் உள்ளே இருப்பவர்களைச் சந்தித்து பேசி அவர்களுக்கு நல்ல வழிகாட்ட ஆசைப்பட்டேன்.
அதற்கு இதைவிட சிறந்த வழி எனக்கு வேறேதும் தோன்றவில்லை. அதனால்தான் சிறுசிறு திருட்டுக்கள் செய்தேன். என் பயமெல்லாம் எங்கே சிக்கிக் கொள்ளாமல் போய் விடுவோமோ என்பது தான்.
எனக்குத் தண்டனை கொடுக்கும் நீதிபதியும் நல்ல மனிதர் ஆறு மாதத்திற்கு குறையாமல் கணிசமாகவே எனக்குத் தண்டனை போட்டுத் தீட்டி விடுகிறார்.
உள்ளே எனக்கு ஒரே சந்தோஷம் தான். பலபேர் வெளியே வர நான் உதவியிருக்கிறேன்.
உண்மை ஞானிக்கு அரண்மனையும் சிறைச்சாலையும் ஒன்றுதான் என்பதைத் தம் வாழ்வின் மூலம் நிரூபித்தவர்.











