தமிழக வரலாற்றின் மிக முக்கியமான செப்பேடு.
சோழ மன்னர்களின் சந்ததி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் கடல் வணிகம், மத நல்லிணக்கம், கடற்படை வலிமை, உலகத் தொடர்பு எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சொல்லும் ஒரு “டைம் மெஷின்” போன்றது
முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த 21 பெரிய தகடுகளும், பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சேர்க்கப்பட்ட 3 சிறிய தகடுகளும் சேர்த்து மொத்தம் 24 செப்புத் தகடுகளைக் கொண்டது.
இந்தத் தகடுகள் ஒரு பெரிய செப்பு வளையத்தால் கோர்க்கப்பட்டு, அதன் நடுவே சோழர்களின் முத்திரை இடப்பட்டு பூட்டப்பட்டுள்ளது (பார்க்க மாதிரி படம்-Minute Traveller)
21 பெரிய தகடுகளில், இராஜராஜர் காலத்தில், ஸ்ரீவிஜய அரசரின் வேண்டுகோளின்படி நாகப்பட்டினம் புத்த விஹாரத்திற்கு வழங்கப்பட்ட நிலத் தானம் பதிவு செய்யப்பட்டு, அதனை மகன் இராஜேந்திர சோழன் தனது ஆட்சிக்காலத்தில் உறுதிப்படுத்திய செய்தி உள்ளது.
பின்னர் சேர்க்கப்பட்ட 3 சிறிய தகடுகள், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், அதே புத்த விஹாரத்திற்கு வழங்கப்பட்ட உரிமைகள், கொடைகள் மற்றும் முந்தைய தானங்கள் தொடர்ந்த செய்தியைச் சொல்கிறது.
நாகப்பட்டினம் பகுதி டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பல பழமையான பொருட்கள், ஆவணங்கள், சிலைகள் ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது ஆனைமங்கலம் செப்பேடுகளும் டச்சு (நெதர்லாந்து) அதிகாரிகளின் கைகளில் சென்றிருக்கலாம். பின்னர் அவை நெதர்லாந்தின் Leiden University Libraries தொகுப்பில் இதுவரை பராமரிக்கப்பட்டு வந்து, இன்று 16.05.2026, இந்தியாவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நம் போன்ற எளியவர்கள் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்த இச்சோழப் பொக்கிஷத்தை விரைவில் நாம் நேரில் காணலாம்.











