🌹 🌿 வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா?
காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.
🌹 🌿 செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?
செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.
🌹 🌿 கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா?
கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.
🌹 🌿 திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன?
அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
🌹 🌿 சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?
சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.
🌹 🌿 கனவில் பாம்பு அடிக்கடி வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா?
பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.
🌹 🌿 பூஜை, விரதம் போன்றவற்றை பெண்கள் மட்டுமே கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா?
இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.
🌹 🌿 மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன?
சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.
🌹 🌿 வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் அதை விற்றுவிடுகின்றனர். இதற்கு சாஸ்திர ரீதியான காரணம் உண்டா?
பன்றியைத் தவிர மற்ற மிருகங்கள் இடித்துவிட்டால் வாகனம் தங்கமாக மாறிவிடுமா? இதற்கு சாஸ்திரங்களையெல்லாம் இழுக்க வேண்டாம். வாகனங்களை விற்கவும் வேண்டாம். முதலில் எல்லோரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். “சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தில் இடிப்பவர்களெல்லாம் அடுத்த பிறவியில் பன்றியாகப் போகக் கடவது’ என்று சபிக்குமளவுக்கு சிலர் வாகனம் ஓட்டுகின்றனர்.
🌹 🌿 திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது என்று சொல்லுங்கள்.
சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.
🌹 🌿 கோயிலில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?
முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.
🌹 🌿 சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்?
நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி – நந்தி, கணவன் – மனைவி, பெற்றோர் – குழந்தை, குரு -சிஷ்யன், பசு – கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.
🌹 🌿 நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்?
பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
🌹 🌿 பஞ்சாங்கத்தில் நட்சத்திரம், திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருப்பதாக பார்க்கிறோம். விரதம், வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்?
விரதம், வழிபாடு மேற்கொள்வதிற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால், முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ளுங்கள். திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.
🌹 🌿 கிருஷ்ணர்வெண்ணெய் திருடுவதில்உள்ளதத்துவம் என்ன?
மேலோட்டமாக பார்க்கும்போது திருடுவது போலத் தெரிந்தாலும், அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அதை திருட்டாக எண்ண மாட்டோம். வெண்ணெய் என்பது பக்தி நிறைந்த வெள்ளை உள்ளத்தைக் குறிக்கும். அதை பரம்பொருளான கிருஷ்ணர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்.
🌹 🌿 விளக்கேற்றக் கூடிய திசைகள் யாவை?
கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் ஏற்றலாம். தெற்கில் மட்டும் ஏற்றக்கூடாது.
நம்முடைய இஷ்டதெய்வத்தின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா? இஷ்டதெய்வ சிலையை வைத்து வழிபடலாம். வழிபாட்டின் போது காலை, மாலை வேளைகளில் பால், பழம் பிரசாதமாக வைத்து பூஜை செய்யுங்கள்.
🌹 🌿 பிரதோஷம் என்றால் என்ன? அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலன் உண்டாகும்?
தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக்கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
🌹 🌿 ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் பழமொழியின் பொருள் என்ன?
மாலறு நேயமும் மலிந்தவர் வேடமும் தான் அரன் எனத் தொழுமே என்கிறது சிவஞான போதம். உண்மை பக்தியுடன் சிவாலயம், சிவனடியார்களைத் தொழுதால் அறிவும், நல்வாழ்வும் கிட்டும் என்பது இதன் பொருள். நல்லறிவே மகிழ்ச்சியான வாழ்வின் அடித்தளம். இதனைத் தரும் ஆற்றல் ஆலய வழிபாட்டிற்கு மட்டுமே உண்டு. ஊர்கள் தோறும் சிவ, விஷ்ணு கோயில்கள் எழுப்பப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. வீட்டில் எவ்வளவு தான் ஜெபம்,ஹோமம், பூஜை செய்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தான் நிறைவு உண்டாகும். சித்தாந்தம் கூறும் இவ்வளவும் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ எனும் ஒரே வரியில் கூறிவிட்டார் அவ்வைப் பிராட்டியார்.
🌹 🌿 புனிதமான கோயில் கோபுர சிற்பங்களில் ஆபாச சிலைகள் வடித்திருப்பதன் காரணம் என்ன?
இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது. புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது. சினிமா, நாடகம், “டிவி’ போன்றவை வந்து இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனிதஇனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.
🌹 🌿 சுவாமிக்கு சாத்திய மாலையை வாகனத்தின் முன் கட்டிக் கொள்ளலாமா?
சுவாமிக்கு சாத்திய மாலைகள் பிரசாதம் எனும் புனிதப் பெயரையடைகின்றன. இவை காலில் படும்படியாக எங்கும் விழக்கூடாது.வாகனங்களில் கட்டிக் கொள்வதால் அது செல்லும் இடம் எல்லாம் சிதறி விழும். அதன் மீது மற்றைய வாகனங்கள் ஏறிச்செல்வது, நம் காலில் படுவது போன்ற தவறுகள் ஏற்படுகின்றன. இது பாவச் செயல். செய்யக்கூடாது.
🌹 🌿 சிவலிங்க வழிபாட்டை வீட்டிலேயே செய்வது சரியா?
என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வழி நின்று நம் எல்லார் இல்லங்களிலும் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்தலும் மற்றும் அவரவர் குல வழக்கப்படி தெய்வ விக்ரகங்களை பூஜை செய்வதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இதற்கு ஆன்மார்த்த பூஜை என்று பெயர். கோயில்களில் செய்யப்படுவது பொது நலனுக்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜை. இரண்டும் சரியாக நடந்தால் தான் நாமும் நாடும் சுபிட்சமாய் இருப்போம்.
🌹 🌿 பிதுர்தோஷம் ஏன் ஏற்படுகிறது. அதைப் போக்கும் வழி என்ன?
காலம் சென்ற முன்னோருக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டை ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனுடைய சந்ததி தழைக்க அவரவர்களது முன்னோர் வழிபாடு எனும் பிதுர் காரியத்தை அவசியம் செய்ய வேண்டும். ஆண்டு தோறும் திதி கொடுத்தல், அமாவாசை தர்ப்பணம் செய்தல் போன்றவை பிதுர் காரியங்களாகும். இவற்றைச் சரியாக செய்யாதவர்களுக்கு பிதுர் தோஷம் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கையில் குறைபாடு, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைப் போக்கிக் கொள்ள ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றில் தில ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகும், பிதுர் காரியங்களாகிய முன்னோர் வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் பிதுர்தோஷம் நீங்கி நல்ல குடும்ப வாழ்க்கையும் வம்ச விருத்தியும் உண்டாகும்.
🌹 🌿 திருமணத்திற்குப் பின் பெண்கள் பிறந்த வீட்டு குல தெ#வத்தை வழிபடலாமா?
புகுந்த வீட்டுக் குல தெய்வம் தான் உங்களின் குலதெய்வமும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், தாய்வீட்டு குலதெய்வத்தை ஒதுக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு, தாய் வீட்டுக் குல தெய்வக் கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவது உள்ளிட்டவற்றைச் செய்யலாம். இது விசேஷமானதும் கூட.
🌹 🌿 ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டை நதியில் விட்டுவிடலாமா? ஸ்ரீராமஜெயம் நோட்டில் எழுதுவதற்கு லிகிதநாமஜெபம் என்று பெயர். எழுதிய நோட்டை பூஜையறையில் வைப்பது சிறப்பு. இயலாவிட்டால் ராமநாம வங்கிகளுக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள்.
🌹 🌿 வீட்டிலிருந்து கிளம்பும்போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்பது உண்மைதானா?
சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்னையில்லை.
🌹 🌿 வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா? விளக்கம் தேவை.
முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.
🌹 🌿 அசுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விபூதி குங்குமம் அணிந்து செல்லக் கூடாது என்கிறார்களே, சரிதானா?
எந்த இடத்திற்குச் சென்றாலும் விபூதி அணிந்து செல்லத்தடையில்லை. குங்குமம் கூடாது. நகை அணிந்து செல்லக்கூடாது. திருமணமான பெண்கள் மேற்படி இடத்திற்குச் செல்லும் பொழுது, ஒரு மஞ்சள் கிழங்கை முந்தானையில் முடிந்து செல்ல வேண்டும்.
🌹 🌿 செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்லுங்கள்.
செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை வேளையில், செவ்வாய் கிரகத்திற்கு தீபம் ஏற்றி, சிவப்பு மலர் சாத்தி வழிபடுங்கள்.
🌹 🌿 சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்?
நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
🌹 🌿 அறுபது வயதடைந்த அனைவரும் 60ம் கல்யாணம் கட்டாயம் நடத்த வேண்டுமா?
நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது அறுபதாவது பிறந்த நாளில் தான். மறுமுறை பார்ப்பது நூற்று இருபதாவது வயதில்! அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள்ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும். அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை “ஷஷ்டியப்தபூர்த்தி சாந்தி’ என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கட்டாயமாக செய்து தான் ஆக வேண்டும். ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக நடத்திக் கொள்ளலாம்.
ஒரே வீட்டில் இரு திருமணங்களைச் சேர்த்து நடத்தலாமா? நடத்தலாம், முகூர்த்த நேரத்தை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். கண் திருஷ்டிக்குப் பயந்துதான் சிலர் இதை செய்ய யோசிக்கிறார்கள். தேங்காய் உடைத்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து விடுங்கள். தம்பதிகள் அமோகமாக இருப்பார்கள்.
🌹 🌿 சிலர் கடவுள் வேடம் அணிந்து பிச்சை எடுக்கிறார்களே. இதை ஊக்கப்படுத்தலாமா?
பிச்சை எடுப்பதே தவறு. இதில் கடவுள் வேடம் வேறு. கிடைக்கும் காசை எடுத்துக் கொண்டு வேடத்தைக்கூட கலைக்காமல் அசைவ ஓட்டலிலும் மதுபானக்கடைகளிலும் இவர்களைக் கண்டு வேதனைப்படுபவர்கள் ஏராளம். எனவே ஊக்குவிக்காதீர்கள். பிச்சைக்காரர்களே இல்லாத நாடாக இந்தியா மாற வேண்டும். பிச்சைஎடுப்பவர்கள் திருந்தி வேறு வழியில் உழைத்து சம்பாதிக்க வேண்டும். அவர்களது குழந்தைகளையாவது படிக்க வைக்க வேண்டும். எவ்வளவோ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தோன்றியும் இவர்களை மாற்ற முடியவில்லையே!
🌹 🌿 ஜாதகத்தில் பெண் சாபம் இருந்தால் நிவர்த்தி செய்வது எப்படி?
இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பது, குதிரைக் கொம்பாகிவிட்டது. பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படத் தோன்றுகிறது. இதற்குப்பரிகாரம் பிறக்கின்ற பெண் குழந்தைகளையாவது பாராட்டி சீராட்டி வளர்ப்பது தான்! பெண் குழந்தை பெற்றெடுப்பவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். ஜாதகப்படி பெண் சாபம் இருந்தால் சுமங்கலி பூஜை செய்யுங்கள்.
🌹 🌿 பெரியவர்களை சந்திக்கும் பொழுது எலுமிச்சம்பழம் கொடுப்பது ஏன்?
எலுமிச்சம் பழம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பெரியவர்கள், குழந்தைகள், ஆசிரியர், தெய்வம் இவர்களைப் பார்க்கச் செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்லக்கூடாது. அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், பழங்கள், கோயிலுக்கு என்றால் புஷ்பம் இப்படி எதாவது எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும்.
🌹 🌿 கோயிலில் பிறரால் ஏற்றப்பட்டு அணைந்து போன விளக்கை மீண்டும் ஏற்றி வைப்பது நல்லதா?
நாம் புதிய தீபம் ஏற்றுவதைவிட உயர்ந்தது பிறர் ஏற்றி அணைந்த தீபத்தை மீண்டும் ஏற்றுவது. சுவாமி, சந்நிதியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுடர் விழுந்து அணையும் தருவாயில் இருந்த அந்த விளக்கில் எண்ணெய் குடிப்பதற்காகச் சென்ற எலி ஒன்று, தாம் அறியாமலேயே தீபத்தைத் தூண்டிவிட்டது. அறியாமல் செய்தாலும் கூட இச்செயல் மிகப் பெரிய புண்ணியமாக எலிக்குக் கிடைத்து மறு பிறவியில் மிகப் பெரிய அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றது. எனவே சந்நிதியில், அணைந்துள்ள தீபங்களை எந்த குழப்பமும் இல்லாமல் செய்யுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் தான் பிரதமர்.











