பெரியவாளை அவர் அறியும் வாய்ப்பு கிடைத்தது.
கர்நாடகாவில் ஒரு பெரிய மருத்துவர். ஏழைகளுக்கு பிரத்யேகமாக இலவசமாக
மருத்துவம் செய்யும் புனித சேவை செய்து கொண்டிருந்தார். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா
பெரியவாளை அவர் அறியும் வாய்ப்பு கிட்டாமலிருந்தது.
அவர் வாழ்வில் ஒரு அற்புத நிகழ்ச்சியால் ஸ்ரீ மகா பெரியவாளின் அருள் வலிய
அவரை ஆட்கொண்டது. ஒரு முறை அவர் தன் மனைவி குழந்தையோடு ஒரு
நெடுஞ்சாலை வழியே இரவில் காரில் செல்ல நேர்ந்தது.
திடீரென்று பலத்தமழை ஆரம்பித்துவிட்டது. மழை இருட்டில் கார் செல்லும்
பாதைக் கூட தென்படவில்லை. கார் ஓட்டுவது மிகவும் கடினமாகவும்
அபாயகரமானதாகவும் இருந்தது. மிகமிக நிதானமாகத்தான் காரை ஓட்டிச் செல்ல
முடிந்தது.
அந்த இருட்டில் இரவு 11 மணிக்கு கொட்டும் மழையில் எப்படியோ ஒரு சிறு
கிராமத்திற்கு டாக்டர் வந்து சேர்ந்தார். முன் ஏற்பாடில்லாமல் பயணம்
மேற்கொண்டதாலும்,
எதிர்பாராத பெரும் மழையாலும் அவர்கள் சாப்பிட எதுவும் கொண்டு வராத
நிலையில் அந்த இக்கட்டான சூழ்நிலையோடு பசியும் மேலோங்கி வாட்டியது.
கிராமத்தை மெதுவாக நெருங்கிவிட்டவருக்கு அருகே ஏதாவது ஒரு உணவு விடுதி
தென்படாதா என்று எதிர்பார்க்கும் நம்பிக்கையும் அந்த நடுநிசியில் ஏற்பட
வாய்ப்பில்லை.
அப்போது அவருக்கு சற்றே நம்பிக்கை ஊட்டும் வகையில் அங்கே ஒரு வீடு
பிரகாசமாக ஒளிதரும் விளக்குடன் தென்பட்டது. மேலும் அந்த வீட்டின் முன் சிலர்
யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பதுபோல சாலையில் வந்து நின்றிருந்தனர்.
வீட்டின் கதவும் திறந்திருந்தது.
டாக்டர் காரை நிறுத்தினார். இறங்கி அந்த வீட்டை நோக்கி சென்றார். அங்கு
நின்றுகொண்டிருந்தவர்களிடம் அப்பகுதியில் சாப்பிட ஏதாவது ஹோட்டல்
இருக்கிறதா என்றும் அந்த இரவில் தங்க விடுதி இருக்கிறதா என்றும் கேட்டார்.
உடனே அதற்கான பதிலை அங்கே நின்றவர்கள் சொல்லாமல் அவர் டாக்டரா
என்றும் குடும்பத்துடன் வந்திருக்கிறாரா என்றும் பதிலுக்கு கேட்டதில் டாக்டருக்கு
ஆச்சர்யம் ஏற்படுத்தும் அனுபவம் ஒன்றிக்கான ஆரம்பம் ஏற்படலாயிற்று.
“ஆமாம்” என்றார் டாக்டர்.
“உங்களுக்குதான் நாங்கள் காத்திருக்கிறோம்” என்று அவர்கள் சொன்னபோது
டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருவேளை வேறு யாரோவென்று தன்னை
அவர்கள் தப்பாக புரிந்துகொண்டு இப்படி சொல்கிறார்களோ என்று அவர்
எண்ணினார்.
அவர்கள் உறுதியாக இரண்டு மணி நேரமாக டாக்டருக்காகத்தான் காத்திருப்பதாக கூறி உள்ளே அழைத்துச் சென்றனர்.
“உங்களுக்கு சாப்பாடு தயாராக உள்ளது. உள்ளே வந்து முதலில் சாப்பிட உட்காருங்கள்” என்று அவர்கள் உபசரிக்க தொடங்கியபோது ஒருவேளை தன்னிடம் இதற்கு முன்பு வைத்தியம் பார்த்துக்கொண்டவர் யாராவதாக அவர்கள் இருக்கக் கூடுமோ என்று டாக்டரின் எண்ணம் சென்றது.
அதை அவர்களிடமே கேட்டேவிட்டார். ஆனால் அவர்களோ “முதலில் சாப்பிடுங்கள். குழந்தைகள் பசியோடு இருக்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு தூங்கட்டும். பிறகு உங்கள் சந்தேகத்திற்கு பதில் அளிக்கிறோம்” என்று சொல்லி உட்கார வைத்து உணவை பரிமாறினர்.
எல்லோரும் சாப்பிட்டு அரை மணிநேரம் சென்றது. அவர்கள் அந்த அதிசயத்தை வெளிப்படுத்தினர்.
ஸ்ரீ மஹா பெரியவா எங்க கிராமத்து வழியா பக்கத்து ஊருக்கு போய் தங்கப்போறதா எங்களுக்கு தகவல் கிடைச்சது. மகான் வருகையை எதிர்பார்த்து அவாளுக்கும் ஸ்ரீமடத்தில் உள்ளவர்களுக்கும் சமையல் தயாரிச்சு காத்திருந்தோம்.
ஸ்ரீ பெரியவா இந்த பக்கம் வந்தவுடன் ஓடிப்போய் எங்க கிராமத்திலே வந்து தங்கிட்டு அப்புறம் கிளம்பலாம் என்று பெரியவாகிட்டே விண்ணப்பிச்சிண்டோம்.
ஆனா ஸ்ரீ பெரியவா மழைக்கு முன்னாடி அடுத்த ஊருக்கு போய் சேர்ந்தாகணும் அதனால் வர முடியாதுன்னு வருத்தத்தோடு சொன்னார். இருந்தாலும் இன்னிக்கு ராத்திரி ஒரு டாக்டர் தன் காரில் குடும்பத்தோடு அகாலத்திலே வருவாங்கன்னும், அவர்களை உபசரித்து வேண்டியதை செய்ய சொல்லியும் அன்பா உத்தரவிட்டுட்டு சென்றார்.
அந்த மகான் சொன்னதாலே உங்களை எதிர்பார்த்து காத்திருந்தோம்.
ரொம்ப நேரமானதாலேயும், மழை கொட்டறதாலேயும் நீங்க எப்போ வருவீங்களோன்னு பயத்தோடு ரெண்டுமணி நேரமா இங்கே நிக்கறோம்…நீங்க வந்ததிலே ரொம்ப சந்தோஷம்.
ஸ்ரீ பெரியவா ஆக்ஞையை நிறைவேற்றியதினாலேயும் ரொம்ப பாக்யமா உணரறோம்”
அவர்கள் சொல்லிக் கொண்டே போக, டாக்டர் ஆச்சர்ய மிகுயால் ஸ்தம்பித்து நின்றார். யார் அந்த ஸ்ரீ பெரியவா? எப்படி தான் இந்த வழியே வரப்போவதும், அகாலத்தில் பசியோடு மழையில் மாட்டிக் கொண்டு திண்டாடப்போவதும் அந்த பெரியவாளுக்கு எப்படி முன்பே தெரியவந்தது என்றெல்லாம் அவர் மனம் மிக நம்பமுடியாது தவித்தது.
அந்த மகான் சாட்சாத் தெய்வமாகத்தான் இருக்க வேண்டுமென்று அசையாத நம்பிக்கையும் வேர்விட்டுருந்தது.
ஈர்த்து ஆட்கொண்ட அந்த பெருங்கருணையினால் அந்த டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளெனும் தெய்வத்தை அதற்குப்பின் பற்றிக் கொண்டு ஸ்ரீ பெரியவாளின் பக்தராகும் பாக்யம் அடைந்தார்.











